இலங்கையில் உள்ள 347 உள்ளூராட்சி, நகராட்சி, மாநகராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கிவருகின்றது. 2023ஆம் ஆண்டில் இடம்பெற்றிருக்க வேண்டிய இந்தத் தேர்தலானது, அதிக காலம் தாழ்த்தியே இடம்பெறவுள்ளது.
பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி இதுவரைகாலமும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போதைய அறிவிப்பின்படி எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சிகளும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. ஆனால் தேர்தல் இடம்பெறவில்லை. அதற்குள் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாகக் களமிறங்கியவர்களில் பலர் புலம்பெயர்ந்திருந்தனர். அரசியலிலிருந்து ஒதுங்கினர். இறந்துபோயினர்.
எனவே கட்சிகள் தம் பிரதான வேட்பாளர்களைத் தவிர்த்து இரண்டாம், மூன்றாம் நிலை வேட்பாளர்களையே தேர்தல் போட்டியில் ஈடுபடுத்தவேண்டியிருக்கிறது. அத்தோடு 2023ஆம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தேசிய மக்கள் சக்திக்கு இவ்வளவு பெரிய ஆதரவு அலை இருக்கவில்லை. ஆளுங்கட்சியாகவும் இருக்கவில்லை. ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தியே ஆளுங்கட்சியாக மாறியிருக்கிறது.
எனவே அந்தக் கட்சியில் இணைந்து போட்டியிட பலரும் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இந்நிலைகளைக் கவனத்தில்கொண்டே, உள்ளூராட்சிசபை தேர்தல் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி 2023ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கல் அனைத்தும் செல்லுபடியற்றதாகின.
இதுவரைகாலமும் தெற்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளை ஆளுங்கட்சியே கைப்பற்றி வந்துள்ளது. அல்லது அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சியாக மாறும் என எதிர்பார்க்கப்படும் கட்சி, உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும் நிலையே ஒரு மரபாக நீடித்துவந்திருக்கின்றது.
ஆனால் வடக்கின் நிலைமையே வேறானது. தெற்கில் யார் ஆட்சியைப் பிடித்தாலும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளே உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி வந்தன. சில இடங்களில் தனியாகவும், சில இடங்களில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தும் உள்ளூராட்சி சபைகளை நிர்வகித்து வந்தன. அதனால்தான், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது.
ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து களநிலைவரம் மாற்றமடைந்திருக்கின்றது. தெற்கின் நிகழ்ச்சிநிரலோடு வடக்குவாழ் தமிழர்கள் இசைந்தோட ஆரம்பித்திருக்கின்றனர். ஆகவே இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கட்சிகளினுடைய இருப்பே கேள்விக்குறியாகியிருக்கின்ற இந்நிலையிலும், இங்கிருக்கின்ற குறித்த கட்சிகள், தமக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவும், தேர்தலை எதிர்கொள்ளவும் தயாரில்லாத நிலையிலேயே இருக்கின்றன. இப்போதிருக்கின்ற நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எனவே உள்ளூராட்சி சபைகளும் தெற்கிடம் பறிபோக வாய்ப்புள்ள இந்தத் தருணத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டிய கட்டாயம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே உண்டு. ஆனால் தமிழரசுக் கட்சியோ, தனக்குள் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது திண்டாடிக்கொண்டிருக்கின்றது.
2023ஆம் ஆண்டு ஏற்பாடாகியிருந்த உள்ளூராட்சி சபை தேர்தலின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியானது அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக சேர்ந்திருக்க கட்சிகளை வலிந்து வெளியேற்றியது. ஏனைய கட்சிகள் வெளியேறிப்போய் தனியே தேர்தலில் போட்டியிடுவதற்கு சாதக நிலமைகள் இல்லாதிருந்தபோதிலும்கூட அந்தக் கட்சிகள் வலிந்து வெளியேற்றப்பட்டன. இப்போது தாம் வலிந்து வெளியேற்றிய தரப்பினரை, மீள வந்து சேருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியே அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றது. அந்நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கட்சிகள், இப்போது இன்னொரு கூட்டணியை ஆரம்பித்து விட்டன.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலிருந்து சங்கு சின்னத்தை முன்னிறுத்தி அந்தக் கூட்டணி போட்டியிட்டு வருகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி என்கிற பெயரிலேயே எதிர்கொள்ள அவை தயாராகிவருகின்றன. இந்நிலையில் வேறு வழியே இல்லாமல் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இப்படித் தமிழரசுக் கட்சியானது தனித்துக் களமிறங்கினாலும்கூட, வேட்பாளர் தெரிவில் அதிக சிக்கல்களை அக்கட்சி எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மீது விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்ற இன்றைய நிலைiயில், அதில் இணைந்து உள்ளூராட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்ள இளையவர்கள் முன்வருகிறார்கள் இல்லை என கட்சியின் முக்கியஸ்தர்களே புலம்பும் அளவிற்குத்தான் நிலைமை இருக்கின்றது. எனவே கட்சியில் இருக்கின்ற, முதியவர்களையே களத்தில் இறக்க இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகிவருகின்றது. அடுத்து பெண்களின் பிரதிநிதித்துவம். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து போட்டியிட பெண்களைத் தேடிப்பிடிப்பதே சிரமமானதாக மாறியுள்ளது.
இதனைத் தாண்டி வெளியில் நிற்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. தமிழரசுக் கட்சிக்கு இருக்கின்ற அதே சிக்கல்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் உண்டு. வேட்பாளர்களை தேடிப்பிடிப்பதில் பல்வேறு தடைகள் உள்ளன. இளைஞர்கள், பெண்கள் இணைவதில் பின்னிற்கிறார்கள். இம்முறை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற அனுர – அர்ச்சுனா அலைகள் தம்மைத் தோற்கடித்துவிடும் என அஞ்சுகின்றனர். எனவே தோற்கப்போகின்ற தேர்தலில் போட்டியிடுவதைவிட, தவிர்த்துக்கொள்வது நல்லதெனக் கருதுகின்றனர்.
இவையெல்லாவற்றையும் விட இன்னொரு விடயமும் இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் பங்கெடுப்பதில் தாக்கம் செலுத்துகின்றன. சமூகவலைதளங்களில் தமிழ் தேசியம் சார்ந்த செயற்பாட்டாளர்கள் மீது எழுதப்படும் அவதூறுகள் இந்நாட்டின் ஜனநாயகவெளி குறித்த அச்சவுணர்வை ஏற்படுத்தியுள்ளன. அதுவும் அரசியலுக்கு வரக் காத்திருப்போர் மீது எழுதப்படும் இத்தகைய அவதூறுகள் அவர்களை அரசியல் அரங்கிலிருந்தே ஒதுங்கியிருக்கச்செய்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் ஆதரவாக செயற்படும் இந்த சமூக வலைதளப் போலிக்கணக்குகளின் செயற்பாடுகள் அதிகரித்துச்செல்கின்றன. தாம் இலக்குவைக்கும் நபரை மட்டுமல்லாது, குழந்தைகள், பெண்கள் என அனைவரது நிழற்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவதூறு பரப்பும் வேலையைச் செய்கின்றன. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும், கணனிசார் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் முறைப்பாடளித்தும், இந்தப் போலிக் கணக்குகள் வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படுவதால் தம்மால் எதுவும் செய்யமுடியாதெனக் கைவிரித்துவிட்டனர்.
இலங்கையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளபோதிலும்கூட இது மாதிரியான இணைய குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றதெனில், இதற்குப் பின்னால் பலமான தரப்பினரின் செல்வாக்கு இருக்குமென்பது உறுதியாகின்றது. இது ஒரு விதத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் செயல். தேர்தல் வன்முறைகளை ஊக்குவிக்கும் செயல். ஆனால் சமூக வலைதளங்களின் ஊடாக சேறடிப்பு வேலைகளைச் செய்து ஆட்சியைப் பிடித்த இந்த அரசு அது குறித்தெல்லாம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது சேறு பூசி அவற்றைக் களத்திலிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களைத் தாம் கைப்பற்றிக்கொள்ள, இந்த அவதூறு பரப்பும் சமூக வலைதளப் போலிக்கணக்குகளைப் பயன்படுத்திக்கொள்கின்றது எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதேபோல தமிழ் தேசியக் கட்சிகள் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நிதிசார்ந்த பிரச்சினைகளையும் பெரியளவில் எதிர்கொள்கின்றன. வழமையாக இதுமாதிரியான தேர்தல்களின்போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் குறிப்பிட்டளவிலான நிதிப்பங்களிப்பினை இந்தக் கட்சிகளுக்கு வழங்கும்.
ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் அலை ஓங்கியிருப்பதனால், தோற்கப் போகும் பந்தயத்திற்கு ஏன் பணத்தைச் செலவிடவேண்டும் என்கிற மனநிலையில் இருக்கின்றனர் புலம்பெயரிகள். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்ற தேசிய மக்கள் சக்திக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கட்சிக்கோ விளம்பரங்கள் செய்வதற்கு சமூக வலைதளங்கள் போதுமானவை. இரண்டு தரப்பிடமும் பலமான சமூக வலைதளக் கட்டமைப்பு உண்டு. ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இவ்வாறானதொரு கட்டமைப்பு இல்லை. மரபார்ந்த பரப்புரை உத்திகளுடனேயே தேர்தலை எதிர்கொள்ள அவை தயாராகின்றன. மரபார்ந்த பரப்புரைகளுக்கு அதிக நிதி தேவைப்படும். கட்சிகளிடமும், புலம்பெயர் அமைப்புக்களிடமும் போதிய நிதியின்மை காரணமாக, இம்முறை தமிழ்த் தேசியக் கட்சிகளால் பரப்புரைகளைக்கூட சரியாக செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது.
இவ்வளவு சிக்கல்களையும், தடைகளையும் கடந்தே தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளூராட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. குட்டித் தேர்தல் எனப்படும் இந்த உள்ளூராட்சி தேர்தலானது, தமிழர் தேசத்தின் மிகச்சிறிய அலகான பிரதேச சபைகளின் ஆளுகையைத் தீர்மானிக்கின்ற முக்கியமான தேர்தல். பிரதேச சபைகளின் ஆளுகையையும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இழக்குமாயின், தமிழ்த் தேசத்தின் மொத்த இயக்கத்தினையும் தெற்கிடம் இழந்தநிலையே ஏற்படும். வீதிக்குப் பெயர் மாற்றுவதிலிருந்து, பௌத்த விகாரைகளுக்கு அனுமதி வழங்குவது தொடக்கம் குறித்த பிரதேசத்தின் மொத்த சாதகத்தையும் தீர்மானிக்கின்ற பொறுப்பு தெற்கு கட்சிகளிடம் செல்லும். இப்படியான ஓர் ஆபத்தான கட்டத்திலேயே இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது தமிழர் முன் வந்துநிற்கிறது.
ரமேஸ் - யாழ்ப்பாணம்