பப்புவா நியூகினியாவால் பேஸ்புக் முடக்கம்!
பசுபிக் பிராந்திய நாடான பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளது.
வெறுப்புப் பேச்சு, போலிச் செய்திகள் மற்றும் ஆபாசப் படங்களை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் பேஸ்புக் திடீரென முடக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், இந்த செயற்பாட்டை மனித உரிமை மீறல் என விமர்சித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள பப்புவா நியூ கினியா பொலிஸ் அமைச்சர் பீட்டர் சியாமலிலி ஜூனியர், அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கவில்லை. மாறாக "தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் மிகவும் பிரபலமான சமூக ஊடகமாகும். அங்கு பல சிறு வணிகங்கள் உட்பட 1.3 மில்லியன் மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
நாட்டில் பத்திரிகை சுதந்திரம் குறைந்து வரும் நிலையில், பொது விவாதங்களை எளிதாக்குவதில் சமூக ஊடகங்களும் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இந்நிலையில் பேஸ்புக் முடக்கத்தை "அரசியல் எதேச்சதிகாரத்தின் எல்லைகள் மற்றும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாடு என பப்புவா நியூ கினியாவின் ஊடகக் குழுவின் தலைவர் நெவில் சோய் தெரிவித்துள்ளார்.