ஆர்.சுகந்தன்
இலங்கையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் தேசிய கட்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்பட்டிருந்த பிளவுகள், விமர்சனங்கள், உள்வீட்டு சண்டைகள் காரணமாக அந்தக்கட்சிகள் தொடர்பில் மக்கள் பெரும் அதிருப்தியுற்றிருந்தனர். எனவே இந்தக் கட்சிகளைத் திருத்துவதற்கு அல்லது வழிக்கு கொண்டுவருவதற்கு மாற்றான ஒரு தெரிவை நோக்கி வடக்கு வாழ் தமிழ் வாக்காளர்கள் உந்தப்பட்டனர்.
அதற்குரிய தெரிவாக தமிழ் வாக்காளர்களின் முன்னால் இருந்தது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்தான். தெற்கில் அனுர குமார திஸநாயக்க குறித்து உருவாகியிருந்த அதிதீவிரக் கவர்ச்சியும், அவர் பரப்புரை மேடைகளில் பேசிய ஊழல் எதிர்ப்பும் பெரியளவில் மக்களை ஈர்த்திருந்தது.
அந்த ஈர்ப்பானது மிக விரைவாகவே அதிருப்தியடைந்திருந்த தமிழ் வாக்காளர்களையும் தொற்றிக்கொண்டது. இதன் விளைவாக அனுர குமார திஸநாயக்கவின் சின்னத்தை மக்கள் தேடித்தேடி வாக்களித்தனர். இங்கே வேட்பாளர்களை, அவர்தம் தகுதிகளை மக்கள் கவனத்திலெடுக்கவில்லை.
முழுக்க முழுக்க திசைகாட்டிச் சின்னத்திற்கும், தாம் விரும்பிய இலக்கத்திற்குமே குத்தினர். எனவேதான் தேசிய மக்கள் சக்தி சார்பில் வட மாகாணத்தில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யபட்டனர். இவர்களில் இருவரைத்தவிர ஏனையவர்கள் கடந்த காலங்களில் எந்தவிதத் தேர்தல்களிலும் போட்டியிட்டவர்களும் கிடையாது. மக்களிடம் அறிமுகமானவர்களும் கிடையாது.
இப்படியாக சின்னத்தைப் பார்த்து வாக்களித்தமை தாம் விட்ட மிகப்பெரிய தவறு என இப்போது வடக்கு வாழ் தமிழ் மக்கள் புலம்பத்தொடங்கியிருக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றம் உருவாகி ஆறு மாதம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த ஆறு மாத காலத்தில் வடமாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தானும் நாடாளுமன்றத்துக்குள் காத்திரமான உரையை நிகழ்த்தவில்லை. வரவு - செலவு திட்ட விவாத்தின்போது கூட வாயே திறக்காமல் இருந்துவிட்டனர். அத்தோடு வடக்கில் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவோ, ஊழல்கள் தொடர்பாகவோ எதுவிதமான நடவடிக்கைகளையும் அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை.
இந்த ஆறு மாத காலத்திற்குள் இந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவினை வரவேற்றது, பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்றது, அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் பிமல் ரத்நாயக்காவை வரவேற்றமை ஆகிய நிகழ்ச்சிகளைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை.
வழமையாக தெற்கில் ஆட்சியமைக்கும் அரசு சார்பில் வட மாகாணத்தை மையப்படுத்தித் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு முக்கியமான அமைச்சுப் பதவியையோ அல்லது பிரதி அமைச்சர் பதவியையோ அல்லது இராஜாங்க அமைச்சுப் பதவியையோ வழங்கும். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசானது வடக்கிலிருந்து தெரிவான ஐந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் வழங்கவில்லை. இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, தாம் இனவாத அடிப்படையில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கவில்லை என ஜனாதிபதி சொல்லிவிட்டார்.
ஆனால் அதே ஜனாதிபதி நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அம்பாறை மாவட்டத்திற்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியதாகக் கூறுகிறார். எனவே வடக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட இந்த ஐவரும் திட்டமிடப்பட்ட ரீதியில் அமைச்சுப் பொறுப்புகளுக்குள் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்
இந்த ஐவரையும் தாண்டி தேசிய மக்கள் சக்தி சார்பில் வடமாகாணத்திலிருந்து இருவருக்குத் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது. அதில் ஒருவர், வட மாகாணத்தில் நீண்டகாலம் தங்கியிருந்து தேசிய மக்கள் சக்தியின் அரசியலைச் செய்துவரும், இராமலிங்கம் சந்திரசேகர், மற்றையவர் வவுனியா வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை முன்னின்று நடத்தியவரும், அங்கு குடியிருப்பவருமாகிய உபாலி சமரசிங்க. இருவருமே தேர்தலில் போட்டியிடாதவர்கள். மக்களால் தெரிவுசெய்யப்படாதவர்கள்.
ஆனால் இவர்களில் இராமலிங்கம் சந்திரசேகருக்கு கடற்றொழில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உபாலி சமரசிங்கவிற்கும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இராமலிங்கம் சந்திரசேகருக்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியும், உபாலி சமரசிங்கவிற்கு வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கிலிருந்து மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை வழிநடத்தும் பொறுப்பு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே அரசியல்வாதிகளாவதற்கு முன்பு வரை உயர்ந்த அரச பதவிகளை வகித்தவர்கள். குறைந்தபட்சம் ஒரு பல்கலைக்கழக பட்டத்தையாவது கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு பொறுப்பான எந்தப் பதவிகளும் வழங்காது அரசு தட்டிக்கழித்திருக்கிறது. இதனைக்கூடப் பொதுவெளியில் பேசமுடியாதவர்களாக, அதிகாரத்திற்கு பயந்து ஏவல்செய்பவர்களாக இந்த ஐவரும் தற்போதிருக்கின்றனர்.
இந்த ஐவருமே, தமக்கு கிடைத்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை நடத்தும் பொறுப்பையாவது சரியாக செய்கிறார்களா எனப் பார்த்தால், அதுவும் சந்திசிரிக்கும் நிலையில்தான் இருக்கின்றது. உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, தேசிய மக்கள் சக்தி வடக்கில் அவசரஅவசரமாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை நடத்தியது. அதில் பிரதேச சபை மட்டத்திலான கூட்டங்களுக்குத் தலைமைதாங்கிய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக்கூட கட்டுப்படுத்த முடியாத கையறுநிலையில்தான் இருந்தனர்.
இந்த இடங்களில் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் நேரடியாகவே குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்தளவிற்கு ஒரு பொதுக்கூட்டத்தைக்கூட வழிப்படுத்த முடியாத ஆளுமை குறைபாடுள்ளவர்களாக வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிற தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அதேபோல குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை சந்திக்கும்போதும், பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளுகின்றபோதும், ஊடகவியலாளர் சந்திப்புக்களின்போதும், நேர்காணல்களின்போதும் மிகுந்த தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு வாக்களிக்கின்றவர்களே முகம் சுழிக்கின்ற அளவிற்கு நடந்துகொள்கின்றனர். சிறுபிள்ளைத்தனமான இவர்களின் செயற்பாடுகளே, மக்களை, தாம் பிழையானவர்களைத் தெரிவுசெய்துவிட்டோம் என எண்ணவைத்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கு கடற்றொழில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரைக்கும் யாழ்ப்பாணத்தை தாண்டி வேறெங்கேயும் சென்று மீனவர்களின் பிரச்சினைகளை ஆராயவில்லை. இலங்கையின் மொத்த கடற்றொழில்துறைகளும், மீனவர்களும் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் மாத்திரமே இருக்கின்றது என நினைத்துக்கொண்டு செயற்படுகிறார்.
இப்படி வடமாகாணத்திலேயே அவர் தங்கியிருக்கின்றபோதிலும், வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளைக்கூடத் தீர்க்கவில்லை. தமிழக – வட மாகாண மீனவர்களிடையே முரண்பாடுகளை உண்டாக்கும் விதத்தில் அறிக்கைகளை விட்டுக்கொண்டு, தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளைக் கவனிக்கும் ஒருவராகவே கடற்றொழில் அமைச்சர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆகவே வடக்கு மக்களால் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்படித்தான் இருக்கின்றனர். இந்தப் பேசாமடந்தைகளையே மக்கள் தெரிவுசெய்திருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசிற்கும் இவர்களைப் போன்ற ஆளுமை பேசாமடந்தைகளே தேவையாகவுள்ளனர்.
தாம் சொல்வதை மட்டும் செய்யக்கூடியவர்கள் கிடைத்தால் போதுமெனவே தேசிய மக்கள் சக்தி கருதுகின்றது. இந்த இடத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ,இவர்கள் குறித்து விழித்த “கத்தரித்தோட்டத்து வெருளிகள்” என்கிற பதம் பொருத்தமானதாக அமைகின்றது. ஆனால் கத்தரித்தோட்டத்து வெருளி காவலாவது செய்யும். இவர்கள்............?