சிட்னியில் வாழ்ந்துவரும் அபிஷேக் மாறன் *தி ஃபண்ட்ரைசிங் ப்ளூபிரிண்ட்* என்ற விரிவான இளங்குழும நிறுவனர்களுக்கான ( Startup Founders ) வழிகாட்டி நூலை எழுதியுள்ளார் .
பொதுவாக வெள்ளையர்கள் மட்டுமே கோலோச்சும் முதலீடு வணிகத்தில் ஒரு தமிழராக அபிஷேக் அவர்களின் சாதனை அளப்பரியது. 2024-ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழில் 30 வயதிற்குட்பட்ட 30 சாதனையாளர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எதிரொலிக்காக வழங்கிய நேர்காணல் இது.
நேர்கண்டவர் - ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
எதிரொலி :முதலில் ஒரு சம்பிரதாயமான கேள்வி. இந்த முதலீட்டு துறையில் எப்படி நுழைந்தீர்கள் .உங்கள் பின்னணி பற்றிக் கூற முடியுமா?
அபி: நான் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2021 ஆம்ஆண்டில் துணிகர முதலீட்டாளராக (Venture Capitalist - VC ) பணிபுரியத் தொடங்கினேன். 2018 ஆம் ஆண்டு பட்டப் படிப்பு படித்த பிறகு Super Funds and Endowments போன்ற பெரிய முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் Cambridge Associates என்ற ஆலோசனை நிறுவனத்தில் சேர்ந்தேன்.
சூப்பர் ஃபண்டுகள் முதலீடு செய்யும் துறைகளில் ஒன்றான துணிகர மூலதனம் ( Venture Capitalists) உட்பட பல்வேறு சொத்து நிலைமைகளை ( Asset Classes ) ஆராய்வதில் எனது பங்கு இருந்தது. ஆஸ்திரேலியாவின் VC சந்தை இன்னும் வளர்ந்து வரும் நிலையில், அதற்கு உண்மையான ஆற்றல் இருப்பதை உணர்ந்தேன், அது எனது ஆர்வத்தைத் தூண்டியது.
சுமார் இரண்டரை ஆண்டுகள் Cambridge Associates-ல் பணிபுரிந்த பிறகு, UpStreet என்ற ஸ்டார்ட்அப்பில் பயிற்சியாளாராகச் சென்றேன். நான் அங்கே பொருள் தயாரிப்பு , வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் துறைகளில் பணியாற்றினேன், ஆரம்பக் கட்ட இளங்குழுமங்கள் (startup ) எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும் கற்றுக்கொண்டேன்.
அப்பொழுது நான் முன்பு என்னை நேர்காணல் செய்த Folklore என்ற VC நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தேன். பிறகு அங்கு எனக்கு VCயாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது . ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எனது தற்போதைய நிறுவனமான Rampersandக்கு மாறினேன் . நான் தற்போது இங்கே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருகிறேன் .
எதிரொலி :VC என்றால் என்னவென்று எளிதாக விளக்க முடியுமா ?
அபி: துணிகர மூலதனம் (VC) என்பது மிக வேகமாக வளர விரும்பும் வணிகங்களுக்கு, பொதுவாக தொழில்நுட்பம் அல்லது மென்பொருள் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் ஒரு முறையாகும். மென்பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால் இந்த வணிக அல்லது இளங்குழுமங்கள் பல வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல் மிக விரைவாகச் சேவை செய்ய VC நிறுவனம் உதவி செய்கிறது .
தயாரிப்பு மேம்பாடு, பிராண்டிங் மற்றும் வாடிக்கையாளர் வளர்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம் VC நிதியுதவி அவர்களுக்கு விரைவாக முன்னேறுவதற்கு உதவுகிறது. VC நிறுவனங்கள் பணக்கார முதலீட்டாளர்கள் (வரையறுக்கப்பட்ட கூட்டாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்) மற்றும் தொடக்க நிறுவனர்களுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்படுகின்றன, விரைவான வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பணத்தை எங்கு முதலீடு செய்வது குறிப்பாக எந்த startup நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.
எதிரொலி : VC-கள் எவ்வாறு தேவதை முதலீட்டாளர் ( Angel Investors ) மற்றும் தனியார் பங்கு நிறுவனங்களிலிருந்து ( Private Equity ) வேறுபடுகிறார்கள்?
அபி:ஏஞ்சல் முதலீட்டாளர்கள் பொதுவாக தொடக்க நிலையிலேயே அதாவது எந்த ஒரு நிறுவனத்தின் தயாரிப்பும் வெறும் யோசனையாக இருக்கும்போது ஆதரிப்பார்கள், மேலும் எதையும் உருவாக்குவதற்கு முன்பு நிறுவனருக்கு நிதிஉதவி அளித்து ஆதரவளிப்பார்கள்.
சில துணிகர மூலதன (VC) நிதிகளும் இவ்வாறு முன்கூட்டியே முதலீடு செய்கின்றன, ஆனால் பெரும்பாலானவை குறைந்தபட்சம் ஒரு அடிப்படை தயாரிப்பு ( Basic Product ) அல்லது வழிமுறை கிடைக்கும் வரை காத்திருக்கின்றன.
நிறுவனர்கள் சந்தையைப் பற்றி சோதித்துப் பார்க்கும்போது, VC நிறுவனங்கள் தங்கள் சொந்த முதலீட்டாளர்களிடமிருந்து (வரையறுக்கப்பட்ட கூட்டாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்) பணத்தைப் பயன்படுத்தி பல தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்கின்றன, குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சியே அவற்றின் நோக்கமாகும் .
மறுபுறம் தனியார் பங்கு (PE) நிதிகள் பெரும்பாலும் நிறுவப்பட்ட வணிகங்களில் முதலீடு செய்கின்றன, சில சமயங்களில் முழு கட்டுப்பாட்டையும் வாங்குகின்றன, மேலும் அவற்றை மீண்டும் விற்பனை செய்வதற்கு முன்பு செயல்பாடுகளை மேம்படுத்த வேலை செய்கின்றன. முக்கியமான வேறுபாடு என்னவென்றால், VC பொதுவாக இளம் நிறுவனங்களில் சிறிய பங்கை எடுத்துக்கொள்கிறது, அதே நேரத்தில் PE முன்னேறிய நிறுவன வணிகங்களில் பெரும்பான்மையான பங்கை எடுத்துக்கொள்கிறது.
எதிரொலி : அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவில் ஏன் குறைவான இளங்குழும நிறுவனங்கள் மற்றும் நிறுவனர்களைக் கொண்டுள்ளது? இதற்குப் பின்னால் உள்ள காரணிகள் யாவை?
அபி:பல காரணங்கள் இருப்பினும் முதன்மையான காரணம், எண்ணிக்கை தான். ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் ஸ்டார்ட்அப்கள் குறைவாகவே உள்ளன - அமெரிக்கா அல்லது இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறியது ( 40லிருந்து 100 மடங்கு குறைவு ) . மற்றொரு காரணம், ஆஸ்திரேலியர்கள் வேகமான தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை அவ்வளவு அதிகமாக எதிர் கொண்டதில்லை. இருப்பினும் தொடர்ந்து தொழில்நுட்ப விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
அட்லாசியன் மற்றும் கேன்வா போன்ற வெற்றிகரமான நிறுவனங்கள் மற்றவர்களை ஊக்குவிக்கின்றன, மேலும் இப்போது அதிகமான மக்கள் ஸ்டார்ட்அப் துறையில் நுழைகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப்களுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளன, மேலும் அது அமெரிக்கா அல்லது இங்கிலாந்தை விட இன்னும் மிகக் குறைவாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அமைப்பு , அதிக ஒப்பந்தங்கள் மற்றும் புதிய யூனிகார்ன்கள் உருவாகி சீராக வளர்ந்து வருன்றன. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிக வாய்ப்புகள் ஏற்படுவதற்குண்டான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
எதிரொலி :ஆஸ்திரேலியர்கள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள தயங்குவதற்கு ஒரே காரணம் மக்கள் தொகையா? அல்லது கலாசாரம் சார்ந்த தயக்க நிலையா ? அமெரிக்காவைப் போல ஆஸ்திரேலியா அதிக ஸ்டார்ட்அப்களையும் யூனிகார்ன்களையும் உருவாக்க எவற்றை மாற்ற வேண்டும் அல்லது மாற வேண்டும் ?
அபி:ஆஸ்திரேலியர்கள் வரலாற்று ரீதியாக மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது குறித்து எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருந்து வருகின்றனர், பெரும்பாலும் "எந்தவொரு சாதனமும் உடையாவிட்டால், அதை மேம்படுத்த வேண்டாம்" என்ற மனநிலையில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த அணுகுமுறை, "டால் பாப்பி சிண்ட்ரோம்" (தனியாகத் தெரிவதைத் தவிர்க்க மக்கள் தங்கள் வெற்றியைக் குறைத்து மதிப்பிடுவது) போன்ற கலாசார சார்ந்த விதிமுறைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு புதுமைகளை உருவாக்குவதை மெதுவாக்கியுள்ளது. இருப்பினும், விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, குறிப்பாக உலகளாவிய வெற்றிக் கதைகளால் ஈர்க்கப்பட்டு, ஸ்டார்ட்அப்களை உருவாக்கி முதலீடு செய்யத் தொடங்கும் இளைய தலைமுறையினரிடையே தொடர்ந்து விரைவாக வளர்ந்து வருகிறது.
அதிக அனுபவம் வாய்ந்த நிறுவனர்கள் இப்போது தங்கள் கற்ற பாடங்களை திறந்த மனதுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், இது மிகவும் முக்கியமானது. உலகளவில் அதிகமான ஆஸ்திரேலிய ஸ்டார்ட்அப்கள் வெற்றி பெறுவதைக் காண, திறந்த வெளிப்படையான ஒளிவுமறைவில்லாத அறிவுப்பகிர்வு, துணிச்சலான லட்சியம் மற்றும் வெற்றி மற்றும் தோல்வி இரண்டிலிருந்தும் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வலுவான ஆதரவு அமைப்புகள் இருக்க வேண்டும்.
எதிரொலி :புதிய யோசனைகளை உருவாக்கம், ஸ்டார்ட்அப்களைப் பற்றி அறிதல் மற்றும் தொழில்முனைவோரை ஆராயவும் மாணவர்களை ஊக்குவிக்க நமது பள்ளி மற்றும் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்கள் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
அபி:ஆம், பள்ளிகளில் தற்போதைய கல்வி முறை ஒரு தொழிலைத் தொடங்குவது அல்லது யோசனைகளை செயற்பாட்டிற்கு மாற்றுவது பற்றி அதிகம் கற்பிப்பதில்லை. பல்கலைக்கழகங்களில் இப்போது ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கும் குழுமங்கள் ( Clubs ), சங்கங்கள் மற்றும் ஊக்குவிக்கும் காரணிகள் முன்னரே இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே அதிகம் வளர்ந்துள்ளன. இன்று அதிகமான மாணவர்கள் ஸ்டார்ட்அப்களில் சேரத் தயாராக உள்ளனர், மேலும் சிலர் தங்களை உள்ளடக்கிய சமூகத்தை ( communities ) உருவாக்குகிறார்கள்.
அமெரிக்காவில் இளைஞர்கள் பெரும்பாலும் ஆரம்பத்தில் அதாவது பள்ளிக்காலத்திலேயே நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள், மேலும் இந்த மனநிலை ஆஸ்திரேலியாவிலும் மெதுவாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், அட்லாசியன் அல்லது சேஃப்டிகல்ச்சர் போன்ற பல வெற்றிகரமான ஆஸ்திரேலிய ஸ்டார்ட்அப்கள் பரவலாக அறியப்படவில்லை, ஏனெனில் அவை அன்றாட நுகர்வோருக்கு அல்லாமல் பெரு வணிக நிறுவனங்களுக்கு சேவை செய்கின்றன. ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்க, சமூகம் முழுவதும் அதிகமான மக்களை பங்களிக்க ஊக்குவிக்க வேண்டும், மேலும் இந்த வெற்றிக் கதைகளை மிகவும் வெளிப்படையாகவும் எளிதாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எதிரொலி :ஆஸ்திரேலியாவில் உள்ள பொது ஊடகங்கள் உள்ளூர் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களின் வெற்றிக் கதைகளை ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை, இந்த இருட்டடிப்பு எவ்வாறு பொதுமக்களின் விழிப்புணர்வையும் உணர்வையும் பாதிக்கிறது?
அபி:ஆஸ்திரேலியாவில் வெளிவரும் முக்கியமான செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் வங்கிகள், சுரங்கம் போன்ற பாரம்பரியத் தொழில்கள் அல்லது அரசியல் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற பொதுவான சமூகப் பிரச்சினை சார்ந்த செய்திகள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.
அது மட்டுமின்றி இந்த ஊடகங்கள் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களைப் பற்றி மிக அரிதாகவே செய்தி வெளியிடுகின்றன . வணிக வெற்றி மற்றும் முதலாளித்துவத்தால் ஊடகங்கள் பெரிதும் இயக்கப்படும் அமெரிக்காவைப் போலல்லாமல், ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள் ஒரு பரந்த மற்றும் சமநிலையான அணுகுமுறையையே பெரும்பாலும் தங்கள் கவனத்தில் எடுக்கின்றன, இதனால் தொழில்நுட்பக் கதைகளை அவர்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை .
பலர் கேன்வா ( Canva ) அல்லது அட்லாசியன் ( Atlassian ) போன்ற உள்ளூர் தொடக்க நிறுவனங்களைப் பற்றி செய்தி மூலம் அல்ல, தனிப்பட்ட பயன்பாடு அல்லது அவர்களின் வேலைகள் மூலம் மட்டுமே அறிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிலைமை மாறிவருகிறது . மக்களுக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகரித்து வருகிறது, ஆனால் பத்திரிகையாளர்கள் இன்னும் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கக்கூடிய வழிகளில் இந்தக் கதைகளை எவ்வாறு சொல்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதிகமான இளைஞர்கள் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களை தொடக்கி புதுமைகளை உருவாக்கும்போது, ஊடகக் கவனமும் வளரும் என்று எதிர்பார்க்கலாம், குறிப்பாக விவசாயம் மற்றும் காலநிலை தொழில்நுட்பம் போன்ற அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் தொழில்நுட்பத்தைச் சுற்றி புதிய தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்கும்போது இந்த மாற்றம் நிகழலாம்.
எதிரொலி :சிறந்த எழுத்தாளர் மற்றும் VC முதலீட்டாளராகவும் இருக்கும் நீங்கள் , எந்தப் பாத்திரத்தை அதிகம் விரும்புகிறீர்கள் . இரண்டில் உங்களுக்கு மிகவும் நிறைவைத் தருவது எது?
அபி:உண்மையில், நான் ஒரு VC முதலீட்டாளராக இருப்பதை அதிகம் விரும்புகிறேன் . என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்—எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், அது எனக்கு இயல்பாகவே வரும் ஒன்று, ஆனால் VC யாக இருக்கும்போது , நான் ஒவ்வொரு நாளும் மிகவும் திறமையான, லட்சியமுள்ள மக்களுடன் பேச முடிகிறது. இவர்கள் பெரிய கனவுகளைக் கொண்டவர்கள், மிகப்பெரிய ஒன்றை உருவாக்க முயற்சிப்பவர்கள். சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் அத்தகைய நிறுவனர்களைச் சுற்றி இருக்கும்போது, அவர்களின் ஆர்வம் மிகவும் எளிதாக உங்களை தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.
சில நேரங்களில் அவர்கள் மேலோட்டமாக சலிப்பாகத் தோன்றும் விஷயங்களைப் பற்றி பேசலாம் , ஆனால் அவர்கள் அதை விளக்கும் விதம், அவர்களின் ஆற்றல், அதைப் பற்றிப் பேசும்போது அவர்கள் எப்படி ஒளிர்கிறார்கள் - அது உங்களையும் உற்சாகப்படுத்துகிறது. அந்த வகையான உணர்ச்சிபூர்வமான தொடர்பு மிகவும் சக்தி வாய்ந்தது.
இது உண்மையில் நான் தேடும் ஒன்று: ஒரு நிறுவனர் அவர்கள் உருவாக்குவதைப் பற்றி எனக்கு ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்த முடிந்தால், அங்கு ஏதாவது சிறப்பு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்களால் அந்த ஆர்வத்தை வெளிப்படுத்த முடியாவிட்டால், தொடர்ந்து ஈடுபடுவது கடினம். ஆமாம், ஆர்வமுள்ளவர்களுடன் பணிபுரிவதன் மூலம் நீங்கள் பெறும் ஆற்றல் - அதுதான் எனக்கு VC ஆக இருப்பதை மிகவும் திருப்திகரமாக்குகிறது.
எதிரொலி : ஒரு நிறுவனர் ஒரு சிறந்த யோசனையையும் வலுவான செயற்படுத்தலையும் கொண்டிருந்தாலும், அதைத் தெளிவாகத் தெரிவிக்க சிரமப்பட்டால் என்ன நடக்கும் - இதுபோன்ற சந்தர்ப்பங்களில் VC-கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?
அபி:ஒரு நிறுவனர் தங்களது நிறுவனத்தின் சிறப்பினை வெளிப்படுத்தமுடியாமல் சிரமப்படும்போது, VC-கள் வார்த்தைகளுக்கு அப்பால் என்னவெல்லாம் சிறப்பாக இருக்கிறதென்பதில் கவனம் செலுத்த முயற்சிக்கிறார்கள். தயாரிப்பு , ஆழமான சிந்தனை, பயனர் அனுபவத்திற்கான அக்கறை மற்றும் செயல் மூலம் போன்ற மற்ற விஷயங்களை தெளிவான ஆர்வத்தைக் காட்டும்போது நிறுவனரைப் பற்றிய நம்பிக்கை வளர்கிறது. இருப்பினும், பல நிறுவனர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு சிறப்பாக செயல்படுத்தப்படாமல் போகும் பொருத்தமின்மை ஒரு சிவப்புக் கொடி.
சவால் என்னவென்றால், VC-கள் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான உரைகளை (Pitch ) பார்க்கிறார்கள், சிலவற்றிற்கு மட்டுமே நிதியளிக்கிறார்கள், எனவே ஒரு ஆக்கத்தினை தெளிவாக விளக்கப்படாவிட்டால் அதை ஆழமாக ஆராய அவர்களுக்கு எப்போதும் நேரம் இருக்காது.
இதன் பொருள் சிறந்த யோசனைகளைத் தவறவிடலாம். அதனால்தான் நான் எனது Fundraising Blueprint புத்தகத்தினை எழுதினேன் . இந்த புத்தகமானது திறமையான ஆனால் தடுமாறும் தொடக்க நிறுவனங்கள் எவ்வாறு VC ஆர்வத்தை ஈர்த்தல் , அவர்கள் தகுதியான நிதியைப் பெறுதல் மற்றும் சிறப்பாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ள உதவும்,
எதிரொலி :இந்தப் புத்தகத்தின் வாயிலாக VC செயல்முறையின் ரகசியங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள நீங்கள் ஏன் முடிவு செய்தீர்கள், பல VCகள் பொதுவாக ரகசியமாக வைத்திருக்கும் தகவல்கள் அல்லவா இவை ?
அபி:VC நடைமுறைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதன் பின்னணியில் உள்ள காரணம், திறமையான நிறுவனர்கள் தங்கள் ஆக்கங்களை எவ்வாறு திறம்படத் தெரிவிப்பது என்று தெரியாமல் இருக்க உதவுவதும், நிதி வாய்ப்புகளைத் தவறவிடாமல் தடுப்பதும் ஆகும். மூலதனத்தை திரட்டுவது ஒரு சிக்கலான நிறுவன செயல்முறையாக இருக்கலாம், மேலும் பல தொடக்க நிறுவனர்கள் ( Startup Founders ) VCகள் வணிகங்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தும் மொழி அல்லது கட்டமைப்புகளைப் புரிந்து கொள்ளாததால் தோல்வியடைகிறார்கள்.
இந்த "ரகசியங்களை" பகிர்ந்து கொள்வதன் மூலம், தொழில்முனைவோருக்கு தங்கள் கருத்துக்களை தெளிவாகவும் நம்பிக்கையுடனும் முன்வைக்க கருவிகளை வழங்குவதன் மூலம், ஆடுகளத்தை சமன் செய்வதே எனது குறிக்கோள். இந்த வெளிப்படைத்தன்மை நிறுவனர்களை தங்கள் வாய்ப்புகளை மாற்றியமைத்து மேம்படுத்தவும், நிதியைப் பெறுவதில் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் தேவையான தகவல்களை அளிப்பதால் அவர்களின் கையோங்க வாய்ப்பளிக்கிறது . அதாவது மீனை வழங்குவதை விட அவர்களுக்கு "மீன்பிடிப்பது" எப்படி என்பதைக் கற்பிப்பதே எனது நோக்கமாகும். ரகசியங்கள் ரகசியமாக இருக்க கூடாது. வெளிப்படைத்தன்மை வேண்டும்.
எதிரொலி :தனித்தன்மையான துறையில் ஒரு புலம்பெயர்ந்தவராக நீங்கள் ஏதேனும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறீர்களா, அவற்றை எவ்வாறு சமாளித்தீர்கள்? இதே போன்ற சூழ்நிலைகளில் திணறும் மற்றவர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?
அபி:எந்தவொரு துறையிலும் மிக முக்கியம் நீங்கள் ஏற்படுத்தும் தொடர்புகள். நான் பணிபுரியும் முதலீடு சார்ந்த ஒ வணிக உலகில் பெரும்பாலும் ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய சமூகங்களைச் சார்ந்தவர்களே இருப்பதால் அந்த சமூகங்களில் இருந்த வருபவர்களுக்கு முன்னேறுவது மிக எளிது . நானோ புலம்பெயர்ந்த ,சிறுபான்மை இந்தியத் தமிழன்.எனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன்.
மற்றவர்களைப் போலல்லாமல், கடின உழைப்பு, பொதுவிடங்களில் உரையாற்றுதல் , எழுத்து மற்றும் நிகழ்வுகளில் பங்குபெற்றல் மூலம் எனது சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும் ,நிபுணத்துவத்தையும் , செயல்படுத்தலையும் நிரூபிக்க போராட வேண்டியிருந்தது.
மற்றவர்களை விட அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அதாவது 10 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது . குடியேறியவர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால் உங்களது தடைகளைத் தாண்டிச் செல்வது, தங்கள் துறைகளில் சிறந்து விளங்குவது மற்றும் மற்றவர்களுக்கு உதவுவது. நீங்கள் தனித்து நிற்கவேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். அதாவது கவனிக்கப்படுவதற்கு அசாதாரணமாக உழைக்க வேண்டும்.
எதிரொலி : புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு குறிப்பாக குறிப்பாக பாரம்பரிய வேலைகளுக்கு வெளியே இடர்களை ஏற்றுக்கொள்வது மற்றும் எதிர்காலத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களைத் தொடர்வது குறித்து நீங்கள் என்ன செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள்?
அபி: ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகம் மக்கள் தங்கள் குழந்தைகள் குறிப்பாக மருத்துவர், வழக்கறிஞர் அல்லது பொறியாளர் போன்ற மதிப்புமிக்க, பாதுகாப்பான வேலைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று நினைப்பதை கைவிட வேண்டும். அதிக இன்னல் மிகுந்த , இடர்களுடைய மற்ற தொழிநுட்ப சார்ந்த இளங்குழும நிறுவனங்களை தொடங்குவதற்கு ஊக்குவிக்க வேண்டும் .
அமெரிக்காவில் பல வெற்றிகரமான இந்திய தொழில்முனைவோர் இந்த மரபான விதிமுறைகளைத் தாண்டிச் சென்று வெற்றி பெற்றுள்ளனர், ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களிடையே இந்த தொழில்முனைவோர் உணர்வு இன்னும் இல்லை. எதிர்காலத்தை பற்றிய தாக்கமாக யோசிக்கவேண்டும் , குறுகிய கால கௌரவத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவேண்டும் .
ஜோஹோ மற்றும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் போன்ற வெற்றிகரமான தொடக்க நிறுவனங்களை உருவாக்கிய தமிழ்நாடு போன்ற இடங்களிலிருந்து வரும் வெற்றிக்கதைகள் புதிய முயற்சிகளில் ஈடுபட மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த மனநிலை மாற்றம், குறிப்பாக புலம்பெயர்ந்த தலைமுறையினரிடையே வளர்வதற்கு சிலகாலம் எடுக்கலாம் என்றாலும், எதிர்கால சந்ததியினர் தொழில்முனைவோர் மற்றும் இடர்களை ஏற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன.