இந்த வாரம் இரண்டு வணிகத் திரைப்படங்கள் பார்த்தேன். மலையாள நடிகர் மோகன்லால் நடித்த "துடரும்". மற்றும் ஸ்டோலன் என்றொரு ஹிந்தித் திரைப்படம். ஒரு மாபெரும் நடிகனாக மோகன்லால் காட்சிக்கு காட்சி மிளிர்கிறார்.
உங்களுக்கு வயதாகி விட்டது ,உங்கள் களத்தில் வெளியேறும் காலம் வந்துவிட்டதா ? நீங்கள் என்ன செய்யவேண்டும். பழைய பெருமைகள் பேசிக்கொண்டிராமல் உங்களின் களத்தில் வயதிற்கேற்ற வகையில் களமாடவேண்டும் . அதனை மோகன்லால் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.
மற்றோரு படமான ஸ்டோலன் படமென்பது ஒரு நல்ல சினிமா எப்படி இருக்கவேண்டும். கதாபாத்திரங்களின் மாற்றத்தை எவ்வாறு சரியாக காட்ட வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம். இது என்னடா , தக் லைஃப் படம் விமர்சனம் என்று சொல்லிவிட்டு இந்த படங்களை பற்றி பேசுகிறாயே என்று நீங்கள் கேட்கலாம். முந்தைய இரண்டு படங்களும் கமல் மற்றும் மணிரத்னம் பார்க்கவேண்டும். காலம் மாறுகிறது . கொஞ்சம் புதியவர்களுக்கு வழிவிடுகிறீர்களா ?
விக்ரம்-வேதாளம் படத்தில் விஜய் சேதுபதி சொல்வது போல , நான் ஒரு கதை சொல்லட்டுமா " முன்பொரு காலத்தில் ஒரு ரவுடிக்கூட்டம் இருந்தது. அவர்களுக்கு போட்டியாக இன்னொரு ரவுடிக்கூட்டம் இருந்தது. இந்தக் கூட்டத்தில் ஒருவர் அடுத்த கூட்டத்தில் இருந்த ஒருவரை போட்டுத்தள்ளுகிறார். பதிலுக்கு அந்தக் கூட்டத்தில் ஒருவர் இந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவரை போட்டுத்தள்ளுகிறார். கடைசியில் எல்லோரும் இறந்த பிறகு ,பெரிய ரவுடி திருந்தி விவசாயம் செய்யப்போகிறார் .சுபம் " இது என்னையா கதை ? கருத்து எங்கே ,நீதி எங்கே என்று கேட்காதீர்கள் ? . நீதி நீதி என்று கத்துகிறீர்களே இது தானய்யா தக் லைஃப் ( புதுமைப்பித்தன் பாணியில் ) பழைய படங்களில் சிவாஜி இறந்த பிறகு சுபம் என்று திரையில் தோன்றும். இங்கே பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் இறந்த பிறகு சுபம்.
இந்தப் படத்தின் கதைச் சுருக்கம் , மணி ரத்தினம் காட்டும் உலக சினிமா , ஆயிரம் படிமம் தாங்கிய அபூர்வ சிந்தாமணி என்று உலகமெங்கும் பேசிவிட்டதால் நான் அதனைப் பற்றி பேசப்போவதில்லை. அது மட்டுமில்லாது நான் முந்தைய பத்தியில் கதைச்சுருக்கத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன். மிகவும் எதிர்பார்த்த நம் ஆதர்சங்கள் ஏன் எங்களை கைவிட்டுவிட்டார்கள் என்று நெஞ்சம் பதைபதைக்கிறது. உலகத்தில் பெரிய கொடுமை என்ன தெரியுமா ? நீங்கள் நிமிர்ந்து பார்த்த ஆதர்சங்கள் தரைமட்டத்திற்கு இறங்கிவிடுவது தான், இங்கே நான் சொல்வது மணி ரத்னம் மற்றும் கமல். இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது நாயகன் படம் அல்லவா . ஏறக்குறைய 40 வருடம் கடந்த பிறகும் ஒரு மைல்கல்லாக நிற்கிறது. தக் லைஃப் இவர்களின் மிக மோசமான படம் என்றே சொல்ல முடியும். கதை விவாதம் நடக்கும்போது இப்படித்தான் நடந்திருக்குமென்று நினைக்கிறேன் , " சார் ,நாயகன் மாதிரி படம் வேண்டும். ஆனால் குருதிப்புனல் போன்று இருக்கவேண்டும். ஏற்கனவே ரிச்சா விஸ்வரூபம் படம் எடுத்திருக்கிறேன் .அது மாதிரியும் எடுக்க வேண்டும். அப்புறம் என்னோட விக்ரம் பெரிய ஹிட் .இப்போ எல்லாருக்கும் அந்த மாதிரி படம் தான் பிடிக்கும் , கூடவே சிம்பு ,த்ரிஷா எல்லாம் இருக்கிறதனாலே கொஞ்சம் அவங்களையும் சேர்த்துக்குங்க , உங்க பழைய படம் பீலிங் வேண்டும் சார் " இதற்கு மணி - " கண்டிப்பா செய்துவிடலாம் " விளைவு நமக்கு கிடைத்தது. " தக் லைஃப் "
இந்தப் படத்தில் கமல் இருக்கிறார். கமல் மட்டுமே இருக்கிறார். இவர் வாழும் எல்லா ஊரிலும் எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார். இரண்டு குண்டுகள் பாய்ந்து , இரண்டாயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்த போதிலும் உயிர் பிழைக்கிறார். குண்டு பாய்ந்த போதிலும் வேகமாக வந்து சாகசம் செய்கிறார். அது மட்டுமில்லாது அவருக்கு ஒரு புதுமையான நோய் இருக்கிறது. நமக்கு பிளட் பிரஸர் , நீரிழிவு நோய் போன்று இதுவும் தீராத வியாதி.அதற்கான மருந்தும் அவரே சொல்கிறார். இதனால் உலகத்தில் வாழும் கோடான கோடி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி கணவர்களுக்கு நல்ல டிப்ஸ் தந்திருக்கிறார்.இந்த படத்தில் பொலிஸ் எங்கே என்றெல்லாம் கேட்டீர்களென்றால் மணிக்கு வருவது போல் எனக்கும் கோபம் வரும். அவர்கள் தலைசிறந்த மத்தியஸ்தர்களாக வருகின்றனர். படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை யாரிடமாவது பேசிக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர். உங்களுக்கு புதுதில்லி ,ஜெய்சால்மர் ,கோவா ,திருச்செந்தூர்,மவுண்ட் கைலாஷ் இடங்களின் ரீல்ஸ் பார்க்கவேண்டுமா .இந்த படத்தை தவறவிடக்கூடாது. இந்தப்படத்தின் வில்லன்கள் மற்றும் ஹீரோக்கள் தலைக்குள்ளே எதுவும் இல்லை என்பது நமக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே மிகவும் நீளமாக முடி வளர்த்து விட்டிருக்கிறார் மணிரத்தினம்.
இந்தப்படத்தை பற்றிய ஒரு முகநூல் விமர்சனத்தில் இடைவேளைக்கு பிறகு நீங்கள் படத்தை பார்க்காது போனால் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று பயமுறுத்தியதால் பல்லை கடித்துக்கொண்டு இந்த இரண்டு மணி 40 நிமிட அவஸ்தையை பார்க்க வேண்டிய கொடுமை. இது மட்டுமில்லாது குருதிப்புனல் , நாயகன் லெவல் என்று அடித்து விட்டிருந்தார்கள். பாவிகளா இதெல்லாம் நியாயமா. இந்த 2025 ஆம் ஆண்டில் கூட ஒரு பெண் கர்ப்பம் தரித்து காதலன் கைவிட்டு விட்டால் ( அவன் கூட முழுபோதையில் எனக்கு அதெல்லாம் கவலை இல்லை என்று தானே சொன்னான் . கைவிட வில்லையே , ஹி ஹி ) நாசரின் மகள் மாடியில் இருந்து குதித்து இறந்துபோவாள். எந்த ஊரில் ஐயா நீங்கு இங்கு இருக்கிறீர்கள். இதில் கமல் வேறு தான் வீட்டில் இருக்கும் அத்தனை பெண்களும் வெளியில் போகும்போது ஆண் துணையில்லாமல் போகக்கூடாது என்று பேசுகிறார் ( மகளிர் சங்கங்கள் கவனிக்க வேண்டும் ) . கமலின் மேல் ஒரு சுவர் இடிந்து விழும் காட்சி இருக்கிறது. நியாயப்படி நம்மேல் விழுகவேண்டியது . அப்பொழுதாவது அவர் இறந்துபோய் படம் முடியுமென்று பார்த்தால் .அதில் உயிர்பெற்று சரச வசனம் பேசுகிறார். எம்.ஜி.ஆர் நடித்த கடைசிப்படங்கள் நமது கண் முன்னே வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒரு கவுண்டமணி -செந்தில் காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது. சாட்டையடித்து கொண்டு பிழைப்பு நடத்தும் கவுண்டமணியை பார்த்து ,"நீங்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த ஊரில் இருப்பீர்கள்” என்று ஒருவர் கேட்பார் , அதற்கு கவுண்டமணி " நீங்களா எங்களை அடித்து துரத்துகிற வரைக்கும் நாங்கள் போகமாட்டோம் " என்பார் . அப்பொழுது கேள்வி கேட்டவர் செந்திலைப் பார்த்து , " அப்போ அவரு ?"என்பார். அதற்கு கவுண்டமணி , " செருப்பை கழற்றி அடித்து சாணியைக் கரைத்து தலையில் ஊற்றுகிறவரை அவனும் போகமாட்டான் " என்று பதில் சொல்வார். புகழின் உச்சியில் இருந்த beatles குழுவினர் ஒரு நேர்காணலில் இப்படிச் சொல்லியதாக எங்கோ படித்த நினைவு " We are preparing to fall “ தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் எல்லோரும் தங்கள் புகழின் உச்சியிலிருக்கும்போது எப்பொழுது ஓய்வை அறிவிப்பது என்று திணறுவார்கள். அது போன்று கமலும் ,மணியும் திணறுவது நன்றாகவே நமக்கு தெரிகிறது. கமல் எனும் நடிகன் சிறப்பாகவே வெளிப்படும் தருணங்கள் சில இந்தப் படத்தில் உண்டு என்றாலும் அதற்காக நம்மை படம் முழுவது சோதிக்க வைப்பதைத்தான் தாங்க முடியவில்லை. எதாவது சோகக் காட்சிகள் வரும்பொழுதெல்லாம் " ஐயோ அஞ்சு வண்ணப் பூவே பாடல் வந்துவிடுமே " என்று நமக்கு பயங்காட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நிறைகளே இல்லையா என்று கேட்கலாம். நிறை என்று சொல்லமுடியாது. தேவலை என்று சொல்லலாம். ஏனென்றால் நீங்கள் ஒரு உச்ச நடிகர் ,உச்ச இயக்குநர் படம் என்றால் உச்சத்தில் இருக்கவேண்டும் இல்லையா. அந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியானதின் வேதனை தான் .வேறென்ன சொல்வது. த்ரிஷாவின் கதாபாத்திரம் ஒரு சிக்கலான பாத்திரப் படைப்பு. மிக நன்றாகவே செய்திருக்கிறார். சிம்பு மிக இயல்பாக நடித்திருக்கிறார். இந்த வேடம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல.வையாபுரி ஒரு நல்ல நடிகன் .மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.நாசர் எவ்வளவு பெரிய நடிகன். ஏனைய்யா அவரை வீணடித்திருக்கிறீர்கள் ? .மிகவும் எதிர்பார்த்த ரஹ்மானும் நம்மை வேதனை அடையவைத்திருக்கிறார். மொத்தத்தில் எதுவுமே பிடிக்கவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.
கமல் நடித்த பேசும்படம் என்ற சிறந்த படம் பார்த்திருக்கிறீர்களா .அதில் ஒரு காட்சி வரும் .கமல் ஒரு பெட்டியில் முகஞ்சுளிக்க செய்யும் ,நாற்றமடிக்கும் ஒன்றினை நன்றாக அட்டைப்பெட்டியில் அடைத்து, மினுங்க செய்யும் பளபளப்பு தாளில் சுற்றி ,வாசனைதிரவியம் எல்லாம் அடித்து , விலைமதிப்பான அன்பளிப்பு போல் எடுத்துச் சென்று ஒரு இடத்தில வைத்து விட்டு ஓடிவிடுவார். அதைப்பார்த்துக் கொண்டே இருந்த ஒருவர் அதனை எடுத்து ,திறந்து பார்த்து விட்டு ஏமாந்து போவார். அதைப்போன்ற நிலைமைதான் இந்த படம் பார்த்த எனக்கும் . மற்றும் எல்லோருக்கும்.