இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்களும் அழிந்துள்ளன.
கடந்த 13-ம் திகதி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளிடையே 8-வது நாளாக இன்றும் போர் நீடிக்கின்றது.
கடந்த 7 நாள்களில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட அந்த நாட்டின் ஆயிரத்து 100 இடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன.
குறிப்பாக ஈரானின் அணு சக்தி தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், எண்ணெய் வயல்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு கீழே சுமார் 90 மீட்டர் ஆழத்தில் அந்த நாட்டின் மிக முக்கிய அணுசக்தி தளம் செயல்படுகிறது. இந்த தளம் மீது இஸ்ரேல்விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஆனால் அதனை அழிக்க முடியவில்லை.
அமெரிக்க இராணுவத்தால் மட்டுமே பூமியைதுளைத்து போர்டோ அணுசக்தி தளத்தை அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்குரிய உதவியை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் நிமித்தமே மத்திய கிழக்கை நோக்கி கப்பல்களும், போர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
ஈரான் ராணுவ தரப்பில் இஸ்ரேலை குறிவைத்து இதுவரை 400 ஏவுகணைகள் வீசப்பட்டு உள்ளன. மேலும் 1,000 ட்ரோன்கள் மூலமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இஸ்ரேலிலும் பலர் உயிரிழந்துள்ளனர். எனினும், உயிரிழப்புகள் தொடர்பில் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.