துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து, இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த கொலம்பியா ஜனாதிபதி வேட்பாளர் மிகுய்ல் உரிபே, உயிரிழந்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக மைய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மிகுய்ல் உரிபே அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஜூன் 7ம் திகதி கொலம்பியாவின் போன்டிபான் மாவட்டத்தில் உள்ள மொடேலியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பின்னால் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டாலும், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மிகுய்ல் உரிபே, நேற்று உயிரிழந்தார். இதை, அவருடைய மனைவி மரியா கிளாடியா தராஜோனா சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.