அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை (12) இரவு அரசாங்க நிதி சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி முடிவடையும். ஓக்டோபர் முதலாம் திகதி புதிய நிதியாண்டு தொடங்கும்.
இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்ட சட்டமூலம் செப்டம்பர் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின சட்டமூலத்துக்கு இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்நிலையில், ஒக்டோபர் முதலாம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60 சதவீத உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இதனால் அமெரிக்க அரசு எதிர்கொண்ட நிதி முடக்கம் 43 நாட்களாக நீடித்தது.
இந்த நிதி முடக்கத்தால் அமெரிக்காவில் ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, விமானக் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட சில அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கியது. மற்ற துறைகளின் அரசு ஊழியர்கள் பணிபுரியவில்லை, அதுபோல அரசு ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை.
இந்தச் சூழலில் சில ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன், செனட் சபையில் நிதி சட்டமூலம் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 222 வாக்குகளும், எதிராக 209 வாக்குகளும் பதிவானது. மசோதா நிறைவேறிய இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கையெழுத்திடும் விழா நடந்தது.
இந்த சட்டமூலம் ஜனவரி 30-ம் திகதி வரை அரசுக்கான நிதியுதவியை நீட்டிக்கும். இதனால் அரசின் அத்தனை துறைகளும் இனி செயல்பட ஆரம்பிக்கும். அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள், அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும்.