ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகக் கடுமையான மற்றும் வன்முறையான தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க கடற்படையின் மூன்று அதிநவீன போர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக சென்றபோது, ஈரான் அவற்றை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்காவின் பதில் தாக்குதலில் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பல சிறிய படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மூன்று உலகத்தரம் வாய்ந்த அமெரிக்க போர் கப்பல்கள், தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் ஹார்முஸ் நீரிணையை விட்டு மிக வெற்றிகரமாக வெளியேறின.
அந்த மூன்று கப்பல்களுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, ஆனால் ஈரான் தரப்பில் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது.
முழுமையாகச் சிதைக்கப்பட்ட அவர்களின் கடற்படைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஏராளமான சிறிய படகுகளுடன் சேர்த்து அவர்களும் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.
அந்தப் படகுகள் மிக வேகமாக கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
எங்கள் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன, ஆனால் அவை மிக எளிதாக வீழ்த்தப்பட்டன. அதேபோல், ட்ரோன்களும் வந்தன, அவை காற்றில் இருக்கும்போதே எரிக்கப்பட்டன.
ஒரு பட்டாம்பூச்சி அதன் கல்லறைக்குள் விழுவதைப் போலவே அவை மிக அழகாகப் பெருங்கடலில் விழுந்தன.
ஒரு சாதாரண நாடு இந்த போர்க் கப்பல்களைக் கடந்து செல்ல அனுமதித்திருக்கும், ஆனால் ஈரான் ஒரு சாதாரண நாடு அல்ல.
அவர்கள் பைத்தியக்காரர்களால் வழிநடத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால், எந்தக் கேள்வியுமின்றி அதைச் செய்வார்கள்.
ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காது. இன்று அவர்களை மீண்டும் வீழ்த்தியது போலவே, அவர்கள் விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் அவர்களை இன்னும் கடுமையாகவும், இன்னும் வன்முறையாகவும் வீழ்த்துவோம்.
எங்களது மூன்று கப்பல்களும், அவற்றின் அற்புதமான பணியாளர்களுடன் இப்போது எங்களது கடற்படை முற்றுகையில் மீண்டும் இணையும், இது உண்மையிலேயே ஒரு எஃகு சுவர் ஆகும்' இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் ஏப்ரல் 8-ம் திகதி முதல் அமுலில் இருக்கும் தற்காலிகப் போர்நிறுத்தத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஈரான் ராணுவம் தரப்பில், அமெரிக்கா தங்களது எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், கெஷ்ம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வசிக்கும் இடங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்குப் பதிலடியாகவே அமெரிக்க கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இந்தத் தாக்குதலை தூண்டுதலற்ற ஒன்று என்று கூறி, தற்காப்புக்காகவே பதிலடி கொடுத்ததாக விளக்கியுள்ளது.