காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்... பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது.
சுய இன்பங்களை விரும்புவதில் சளைக்காத அந்நாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டு மக்கள் தங்களது செல்வத்தைச் செலவிடுவதற்காகப் புதிய வழிகளை உருவாக்கி வருகிறார். சீனச் சுங்கத் தரவுகள் இந்த உண்மையை வெளிப்படுத்துகின்றன:
கடந்த தசாப்தத்தில் வடகொரியாவின் மசாஜ் உபகரணங்களின் இறக்குமதி 40 மடங்கு அதிகரித்துள்ளது. டிரெட்மில் (Treadmill) ஏற்றுமதி 600 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பியானோக்கள் மற்றும் பம்பர் கார்கள் (Bumper cars) கூட நாட்டிற்குள் அதிகளவில் கொண்டுவரப்படுகின்றன.
வர்த்தக புள்ளிவிவரங்கள், அரசு ஊடக அறிக்கைகள் மற்றும் அண்மையில் அங்கு விஜயம் செய்த ஐந்து நபர்கள் மற்றும் இரு அகதிகளின் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு ராய்ட்டர்ஸ் (Reuters) மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த நுகர்வுப் போக்கு வடகொரியாவைச் சுற்றி உருவாகி வரும் சொகுசு வணிக வளாகங்கள், கடற்கரை விடுதிகள் மற்றும் பனிச்சறுக்கு மையங்கள் வரை விரிவடைந்துள்ளது.
இது வாழ்வின் சிறு சொகுசுகளுக்கான அணுகலை விரிவாக்குவதுடன் மட்டும் முடிந்துவிடவில்லை என பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அரசு-கட்டுப்பாட்டிலுள்ள பொழுதுபோக்கு மற்றும் சில்லறை வணிக வலையமைப்புகள் மூலம் தனிநபர்களின் செலவினங்களை வழிநடத்துவதன் மூலம், கிம் வணிகத்தின் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை வலுப்படுத்துகிறார், முறைசாரா சந்தைகளை ஒலுக்குகிறார், மேலும் அணுஆயுதமேந்திய நாட்டிற்குப் புதிய வருவாய் மற்றும் வளர்ச்சி ஆதாரங்களைத் திறக்கிறார்.
இந்த மூலோபாயம் "சந்தைகளில் குவிந்துள்ள உற்பத்தி, விநியோகம் மற்றும் மூலதனப் பாய்வுகளை அரசு நிர்வகிக்கும் உத்தியோகபூர்வ பொருளாதார இடத்திற்குள் கொண்டு வருகிறது" என்று சீயோலைத் தளமாகக் கொண்ட ஹூண்டாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் காங் சியோங்-ஹியான் தெரிவித்துள்ளார்.
கிம்மின் ஆயுதத் திட்டத்தைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சொகுசுப் பொருட்கள், எரிசக்தி மற்றும் கனிம வர்த்தகம் மீதான கடுமையான ஐ.நா. தடைகளை வடகொரியா எதிர்கொண்டு வரும் போதிலும், நுகர்வுக்கான வழிகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
வடகொரியாவின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் 3.5% வளர்ச்சியடைந்துள்ளது என்றும், இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக 3% க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது என்றும் தென்கொரிய மத்திய வங்கி ஜூலை மாதம் தெரிவித்துள்ளது.
இந்த அபார வளர்ச்சி வெளிப்புற நபர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மே மாதம் பியங்யாங்கிற்கு விஜயம் செய்த பிறகு, சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தலைநகரின் முன்னேற்றம் "குறிப்பிடத்தக்கது" என்றும், இது கிழக்கு ஆசியாவின் "எந்தவொரு நவீன நகரத்தையும்" ஒத்திருப்பதாகவும் கூறினார்.
ராய்ட்டர்ஸால் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகக் காணொளிகளின்படி, கடந்த ஆண்டு பியங்யாங்கில் திறக்கப்பட்ட ரங்னாங் ஏகுக் கும்சாங் சேவை வளாகம் என்ற சொகுசு வணிக வளாகத்தில் குடியிருப்பாளர்கள் கப்ஸினோக்களைக் குடித்தபடியும், வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்வையிட்டபடியும் உள்ளனர்.
அரசு ஊடகங்களால் புகழப்படும் இரண்டு ஆண்டுகள் பழமையான ஹவாசாங் தேடோங்காங் பீயர் உணவகத்தில் தங்களது தாகத்தைத் தணித்துக் கொள்ள முடிகிறது. ஏப்ரல் மாதத்தில், கிம் தனது மகள் கிம் ஜூ ஏ உடன் ஒரு புதிய செல்லப்பிராணி கடைக்குச் சென்றார், அங்கு அவரது மகள் பூனைக்குட்டிகள் மற்றும் நாய்க்குட்டிகளால் ஈர்க்கப்பட்டார்.
தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பியங்யாங்கின் இந்தத் தீவிரப் பொழுதுபோக்கு முயற்சிகளுக்கு கிரிப்டோகரன்சி கொள்ளைகள், உக்ரைனில் ரஷ்யாவிற்காகப் போரிட வடகொரியப் படைகளை அனுப்பியது, மற்றும் நிலக்கரி மற்றும் பிற கனிமங்களின் ஏற்றுமதி உள்ளிட்ட வருவாய் வழிகள் மூலம் நிதி திரட்டப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு அதிகாரிகளும் இணைய பாதுகாப்பு நிபுணர்களும் கிரிப்டோ திருட்டை வடகொரிய அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்களுடன் பலமுறை தொடர்புபடுத்தியுள்ளனர்.
சீயோலைத் தளமாகக் கொண்ட தேசிய பாதுகாப்பு மூலோபாய நிறுவனம் (தென்கொரிய அரசால் நிதியளிக்கப்படும் சிந்தனைக் குழு), 2023 ஆகஸ்ட் முதல் 2025 டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் ரஷ்யா-உக்ரைன் போரில் தனது ஈடுபாட்டின் மூலம் வடகொரியா 14.4 பில்லியன் டாலர் வரை சம்பாதித்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.