மத்திய கிழக்கு விவகாரத்தில் தென்கொரியா ராணுவ பலத்தை பயன்படுத்தாது எனவும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேலதிகப் பங்களிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சோமாலியக் கடற்பரப்பில் தென் கொரியா தனது கடற்படையை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளது.
எனினும், ஈரான் மீதான போரில் வொஷிங்டனுக்கு ஆதரவாகக் கூடுதல் இராணுவப் பங்களிப்பை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த கோரிக்கையைத் தென் கொரியா இதுவரை தவிர்த்து வருகிறது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜனாதிபதி லீ, "போரில் பங்கேற்கும் வகையிலோ அல்லது போருக்குள் நுழையும் வகையிலோ தென் கொரிய இராணுவம் அனுப்பப்படாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு வழிவகுக்கும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்" என்றார்.
இருப்பினும், "எமது வர்த்தகக் கப்பல்கள், கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏனைய நாடுகளைப் போல நாமும் குறைந்தபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்பதும் தெளிவானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் போருக்கான போதிய ஆதரவை வழங்கவில்லை எனத் தென் கொரியாவை விமர்சித்த டிரம்ப், இந்த கோடைகாலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் குறைத்தார். இது அமெரிக்காவின் தோழமை நாடான தென் கொரியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் தென் கொரியாவின் முதலீட்டு வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த லீ, திட்டத்தின் வணிகச் சாத்தியக்கூறுகள் தொடர்பான கவலைகளே ஒப்பந்தம் எட்டப்படுவதில் முக்கியத் தடையாக இருப்பதாகத் தெரிவித்தார்.