ஆர்.சுகந்தன்
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் நிறைவுக்கு வந்துள்ளது. யாரும் எதிர்பார்த்திராதபடிக்கு தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. ஜே.வி.பி.யின் பிரமாண்ட மீளெழுச்சி, தென்னாசிய அரசியல் மரபையே புரட்டிப்போட்டிருக்கின்றது.
அதாவது இலங்கையின் அரசியல் பாரம்பரியமாக இருந்து வந்த குடும்ப ஆட்சியையும், பாரம்பரியக் கட்சிகளின் ஆட்சியையும் சரித்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி எனும் பேரலை. கொரோனாப் பேரிடரின் பின்னர் சிங்கள மக்கள் எதிர்கொண்ட பொருளாதார வீழ்ச்சியும், பசியும் இந்தப் பேரலையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.
அதன்படி முதலில் ஜனாதிபதி தேர்தலிலும், இப்போது நாடாளுமன்றத்தேர்தலிலும் தம்மை ஆட்சிசெய்வதற்கான புதிய சக்தியைத் தெரிவுசெய்திருக்கிறார்கள் சிங்கள மக்கள்.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையில் பெரியதொரு அரசியல் மாற்றத்தை செய்ததைப் போலவே வடக்கிலும் பெரும்மாற்றத்தை நிகழ்த்தியிருக்கின்றது. அதாவது இதுவரைகாலமும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதான அரசியல் சிந்தாந்தம் தமிழ்த் தேசியமாக இருந்தது.
தேசம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய கோஷங்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அரசியல், நாடாளுமன்ற தமிழ்ப்பிரதிநிதித்துவத்தில் பெரும் செல்வாக்கு செலுத்திவந்தது. ஆனால் இம்முறை அது பெருவாரியான அடியை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னித் தேர்தல் மாவட்டமும், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திலும் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதாவது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரித்து, தேசிய மக்கள் சக்தியின் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள். அதுவும் தமிழினத்தின் இன்றைய அவலங்களுக்கு எல்லாம் சித்தாந்தத் தளத்தில் வழிவகுத்த ஜே.வி.பி.யினர் பக்கம் சாய்ந்திருப்பதும் தமிழர் அரசியல் வரலாற்றில் ஓர் அவமானமாகக் கருதப்படக்கூடியது. இந்த அவமானம் ஏன் நேர்ந்தது ?
இதற்கான முழுப்பொறுப்பையும் இலங்கை தமிழரசுக் கட்சியே ஏற்கவேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக அமரர் இரா. சம்பந்தனும், அவரோடு இணைந்து பணியாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உள்ளிட்டவர்களும் எடுத்த எதேச்சாதிகாரமான தெற்கு நலன்சார்ந்த அரசியல் முடிவுகளும், அதனை மக்களிடமிருந்து மறைக்க அவர்கள் சொன்ன பொய்களும் தமிழ் தேசியத்தை மையப்படுத்திய கட்சிகள் மீதான வெறுப்பை ஏற்படுத்தியது.
அதுபோதாதென்று இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பதவிப் போட்டிகள், வழக்குகள் என்பன இந்த வெறுப்பு மனநிலையே மேலும் ஆழப்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தேர்தல் வரப்போகிற நேரத்தில் வெளியான சாராய ‘பார் லைசன்ஸ்’ விவகாரம் தமிழ் தேசிய கட்சிகள் மீதான தமிழ் மக்களின் மொத்த விரக்திக்கும் காரணமாகியது.
தமிழ் தேசியம் பேசி வாக்குகளைப் பெற்றுவிட்டு, அவரவர் தம் சொந்த நலன்களுக்காக அதனைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்கிற விமர்சனம் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. அதனை மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் காட்டிவிட்டனர்.
அடுத்த காரணம், தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி. தேசிய மக்கள் சக்தி இனவாதப் பின்னணியைக் கொண்டிருப்பினும், அவர்கள் இந்தப் நாடாளுமன்றத்தேர்தலுக்கும், ஜனாதிபதி தேர்தலுக்கும் முன்வைத்த பரப்புரைக் கோஷம் மிக முக்கியமானது.
புதிய வாக்காளர்கள் எனப்படும், புதிய இளந்தலைமுறையினரை இலகுவாகக் கவரக்கூடியது. இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இங்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரச திணைக்களங்கள் வரையில் இடம்பெறும் ஊழல்களே காரணம். ஊழல் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவந்து, பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டால், நாட்டில் இனங்களுக்கிடையில் சமத்துவம் ஏற்படும்.
எனவே அதனைச் செய்ய ஊழலற்ற, குடும்ப ஆட்சி பின்னணியற்ற எமக்கு அதிகாரத்தைத் தாருங்கள் எனக் கேட்டார்கள். அதனை ஏற்றுக்கொண்ட சிங்கள மக்கள் அனுரவை ஜனாதிபதியாக்கினர். அவ்விடத்திலும், தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்டுகிறோம் எனக் கிளம்பிய தமிழரசுக் கட்சி, எவ்வித உத்தரவாதங்களுமின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மீண்டுமொரு அரசியல் தவறை செய்தது. தமிழர்களை வெட்கிதலைகுனியச்செய்தது. எனவே ஜனாதிபதி தேர்தலில் விட்ட தவறை நாடாளுமன்றத்தேர்தலில் விடக்கூடாது எனத் தமிழர்கள் முடிவெடுத்தனர். அதற்குப் பொருத்தமானதாக, தேசிய மக்கள் சக்தி முன்வைத்த கோஷமும் அமைந்தது.
தனியே ஜனாதிபதி பதவியை மட்டும் தந்தால் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல்வாதிகளைத் தண்டிக்க முடியாது. எனவே எங்களவர்களைக் கொண்டு நாடாளுமன்றத்தை நிரப்புங்கள் எனத் தேசிய மக்கள் சக்தி கேட்டது. அதில் நியாயமிருப்பதை ஏற்றுக்கொண்ட மக்கள், பெரியளவு பிரசாரங்கள் இல்லாத தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாண, வன்னி தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களின் அரசியல் அறிவென்பது பூச்சியமே. ஆனால் மக்கள் அதனையெல்லாம் கவனத்தில் கொள்ளாது திசைகாட்டியைக் கண்டால் புள்ளடியிடுவோம் என்கிற கணக்கில் வாக்களித்தனர்.
தமிழ்க் கட்சிகளின் பரப்புரைகளும் இம்முறை மிகப் பலவீனமாக இருந்தன. ஆதிகளவான சுயேச்சைக்குழுக்களும், கட்சிகளிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஆரம்பித்த கட்சிகளுமாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் நாற்பதுக்கும் மேற்பட்ட தரப்புகள் போட்டியிட்டன. வெறும் ஆறு ஆசனங்களைப் பெறுவதற்காக 300இற்கும் மேற்பட்டவர்கள் பரப்புரை செய்தனர். இதனால் பரபரப்புரைகள் செய்ய தொண்டர்கள் இருக்கவில்லை. எனவே 1500 ரூபாவிலிருந்து 5000 ரூபாவரைக்கும் கூலிக்கு அமர்த்தப்பட்ட நபர்கள் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு பரப்புரை செய்தனர். ஒரே நபர் மூன்று கட்சிக்காக பரப்புரை வேலைகளில் ஈடுபட்டு சம்பாதித்தார்.
எனவே இந்தத் தேர்தல் என்பது அதிக பணம் புழங்கிய தொழில்வாய்ப்பாக மாறியது. யாரும் விசுவாசமாகவோ, தமது கட்சியின் வேட்பாளர் வெற்றிபெறவேண்டுமென்றோ பரப்புரையில் ஈடுபடவில்லை. அதேபோல கட்சிகள் நடத்திய கூட்டங்களுக்கும் பெரியளவில் மக்கள் கூடவில்லை. வேறிடங்களிலிருந்து சாப்பாட்டு பார்சல், உணவுப் பொட்டலங்கள் கொடுத்து பேருந்துகளில் ஏற்றிவரப்பட்டவர்களே கட்சிகளின் கூட்டங்களை நிரப்பினர்.
வாக்களிப்பில் ஈடுபட்டவரகளின் எண்ணிக்கையும் வழமையை விட வீழ்ச்சி கண்டிருந்தது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக வாக்காளர் பலர் புலம்பெயர்ந்துவிட்டனர். வீட்டில் இருப்பவர்கள் முதியவர்கள். அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. வாக்களிக்கத் தகுதியுற்றவர்கள், யாருக்கு வாக்களிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, வாக்களிப்பததைத் தவிர்த்துக்கொண்டனர்.
அதையும் மீறி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றப்போனோர் தம் வாக்குகளை செல்லுபடியற்றதாக்கினர். இந்த நிலைமைகள் தமிழ் தேசியம் பேசிய அரசியல் கட்சிகளின் வாக்குவங்கியை வெகுவாகப் பாதித்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்த, பிரதிநிதித்துவத்திலும் அது தாக்கம் செலுத்தியது.
மறுபுறத்தில் பெரியளவில் பிரபலமற்ற வேட்பாளர்களை தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கில் நிறுத்தியிருப்பினும், தனது தொழிற்சங்கங்களோடு தொடர்புடைய அரச உத்தியோகத்தர்களை களத்தில் இறக்கியது. அவர்களின் வெற்றிக்காக சக தொழிற்சங்கங்கள் இரவு பகலாக வேலைசெய்தன. எனவே அரச உத்தியோகத்தர்களின் பெருமளவிலான வாக்குகள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் போக, வெற்றியின் கதவைத் திறப்பது அவர்களுக்கு மிக இலகுவாக இருந்தது.
மற்றையது மருத்துவர் அர்ச்சுனாவின் வெற்றியும் யாரும் எதிர்பாராததது. தேர்தல் பரப்புரையின் முதன்நாள் வரைக்கும் டிக்டொக் மாதிரியான சமூக வலைதளங்களில் கெட்டவார்த்தைகளிலும், காதுகொடுத்து கேட்கமுடியாத சம்பாசணைகளிலும் ஈடுபட்டு வந்த மருத்துவர் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கியிருக்கின்றனர் தமிழர். இளையவர்களும், புலம்பெயர் தமிழர்களும் செய்த அபரிமிதமான பரப்புரையினால் இது சாத்தியமானது.
அவருடன் சேர்ந்து போட்டியிட்ட பெண் வேட்பாளரான கௌசல்யா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனை விட அதிக வாக்குகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். வடக்கில் மருத்துவ மாபியாக்கள் உருவாகிவிட்டன, அரச மருத்துவமனைகளில் ஊழல் இடம்பெறுகின்றது என தனது அரசியல் அஸ்திவாரத்தை அமைத்த அர்ச்சுனா அந்த விடயங்களில் துளியளவுகூட முன்னோக்கி நகரவில்லை. முன்பின் முரணான, சர்ச்சைகளை ஏற்படுத்தும் அவரது சமூக வலைத்தள உரையாடல்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களாகத் தன்னை பேசுபொருளாக வைத்திருந்தார். அவ்வாறு சமூக வலைதளங்களில் அவருக்கு ஏற்பட்ட ஆதரவும், ரசிக மனப்பான்மையும் இன்றைக்கு அவரையும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கியிருக்கிறது.
தமிழ்த் தேசிய இனம் உள்ளேயும் புறமுமாக முற்றாக சிதைவடைந்து வருகின்ற நேரத்தில் கட்டாயமாக அரசியல் ஸ்திரநிலை ஒன்று தேவைப்பட்டது. தமிழ் தேசியத்தை முதன்மைப்படுத்திய அந்த அரசியல் ஸ்திரநிலை மட்டும்தான் இந்த இனத்தை தக்கவைக்கும் சாத்தியக்கூறுகளும் தென்பட்டன. ஆனால் நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல், அந்த அரசியல் அஸ்திரத்தை முற்றாக சாய்த்திருக்கிறது. தமிழர்களின் அரசியல் தெரிவு அவமானகரமானதாக மாறியிருக்கின்றது.