ஜெரா
தமிழர்களின் வாழ்வியலுக்கும் வீதிகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புண்டு. இன்று காப்பெற் செப்பனிடப்பட்டிருக்கும் இந்தத் தெருக்களுக்கும் தமிழர்களுக்கும் அதிக கதைகள் உண்டு. வரலாற்றையே மாற்றியமைக்கும் நினைவுகளுண்டு. உதாரணத்திற்கு யாழ்ப்பாணம் முழுவதும் அழிவுண்டு கிடக்கும் சுமைதாங்கிக் கற்கள் கனதிமிகு பண்பாட்டுச் செய்தியொன்றை தாங்கி வைத்திருக்கின்றன. வட பகுதியில் பெருந்தெருக்கள் அமைக்கப்படாத காலத்தில் மக்கள் கால்நடையாகவும், மாட்டு வண்டில்களிலுமே தூர இடங்களைக் கடக்க வேண்டியேற்பட்டது.
குறிப்பாகத் தலையிலும், தோளிலும் சுமைகளைச் சுமந்துவருபவர்கள் (வியாபாரிகளாக இருக்கலாம்) அந்தச் சுமைகளை இறக்கி வைத்தால், அதனை மீளவும் தூக்கித் தலையில் வைத்து உதவுவதற்கு ஆட்கள் இருப்பதில்லை. எனவே இந்தக் குறையை உணர்ந்த அன்றைய தமிழர்கள், ஏதோ ஒரு நேர்த்திக்கடனின் அடிப்படையில் மக்கள் பயணிக்கும் வீதிகளிலும், இளைப்பாறும் மரங்களின் கீழும் சுமைதாங்கிக் கற்களை நிறுவினர். மனிதனொருவனின் இடுப்பளவு உயரத்திலிருந்து, தோள் அளவு உயரம் வரை அமைக்கப்பட்ட இந்த சுமைதாங்கிக் கற்கள் பயணிகளுக்குப் பேருதவியாக இருந்தன.
யாரின் உதவியுமில்லாமல் சுமைகளை இறக்கிவைக்கவும், மீளவும் தலையிலோ தோளிலோ சுயமாக ஏற்றிச் சுமந்து செல்லவும் இந்தச் சுமைதாங்கிக் கற்கள் பயன்பட்டன. இதன்மூலம் தற்போது வயல்களிலும், மக்கள் வாழாத இடங்களிலும் காணப்படும் இந்தச் சுமைதாங்கிக் கற்கள் ஒரு காலத்தில் பெருந்தெருக்களாக இருந்தன என்கிற வரலாற்றுச் செய்தியும் புலப்படுகிறதல்லவா? தமிழர்களின் புராதன தலைவழிப் பாதையின் வரைபடமும், அந்தத் தரைவழிப் பாதை இணைத்த நகரங்களின் பெயர்வரிசையும் கிடைக்கிறதல்லவா?
ஆகவே சுமைதாங்கிக் கற்களாக “சும்மா” நிற்கும் அந்தக் கற்களிடம் இவ்வளவு பெரிய வரலாற்றுச் செய்தியுண்டு.
இதுபோல, நம் தெருக்கள் சார்ந்த இன்னொரு வரலாற்றுக் குறிப்பையும் இவ்விடத்தில் பதிவுசெய்யலாம். தமிழர் தாயகப் பகுதியைக் குறுக்கறுத்துச் செல்லும் பெருந்தெருக்களின் தொடக்கத்திலும், முடிவிலும், இடையிலும் பிள்ளையார், ஐயனார், வைரவர் ஆலயங்கள் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். இதனைப் படிக்கும் உங்களுக்கு ஏ9 வீதியில் உள்ள முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் நினைவுக்கு வந்திருக்கும். அதேபோல ஈரப்பெரியகுளம் பிள்ளையார் கோயில், வல்லைவெளி முனியப்பர் கோயில், கைதடிப்பிள்ளையார் கோயில், ஒட்டுசுட்டான் வீதியின் ஐயனார் கோயில், நெடுங்கேணி வீதியின் நொச்சியடி ஐயனார் கோயில், அக்கராயன் வீதியின் ஐயங்கன்குள ஐயனார் கோயில் போன்றவையும் நினைவுக்கு வந்திருக்கலாம்.
இந்த வீதிகளின் தொடக்கத்திலும், முடிவிலும், இடைநடுவிலும் இருக்கின்ற ஆலயங்களில் இறங்கிவழிபட்டிருப்போம். தேங்காய் உடைத்திருப்போம். காணிக்கையை உண்டியலில் இட்டிருப்போம். கச்சான் வாங்கி உண்டிருப்போம். ஆனால் இந்த தெருவோர ஆலயங்கள் எப்படி உருவாகின? ஏன் உருவாகின என்கிற விடயங்கள் குறித்து என்றாவது யோசித்திருக்கிறோமா?
புராதன காலங்களில் மக்கள் தம் பயணங்களை கால்நடையாகவும், மாட்டு வண்டில்களிலுமே மேற்கொண்டனர். எனவே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு ஒரு நாளும் எடுக்கும், ஒரு வாரமும் எடுக்கும். தற்காலம் போல வீதிகளில் பெருந்திரளான மக்கள் சென்று வரவும் வாய்ப்பில்லை. எனவே தனியாகவும், குழுவாகவுமே வீதிகளில் பயணம் செய்யவேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில் பயணத்தைத் தொடர்பவர்களை இடைநடுவே யானை, புலி உள்ளிட்ட காட்டு விலங்குகள் தாக்கக்கூடும். கொள்ளையர்கள் தம் கைவரிசையைக் காட்டக்கூடும். எனவே பயணத்தை ஆரம்பிப்பவர்கள், அதன் தொடக்கத்திலேயே தாம் நம்புகின்ற ஓர் தெய்வத்திற்கு ஆலயம் அமைத்து வழிபட்டுச் சென்றனர். இவ்வாறு வழிபட்டுச் சென்றால் தம் பயணத்திற்கு எவ்வித விக்கினங்களும் நேராது என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
அதுபோல பயணத்தின் முடிவிடமாக அல்லது கிராமங்களின் தொடக்க இடமாக இருக்கின்ற பகுதியிலும் வழித்தெய்வக் கோயில்கள் அமைந்திருந்தன. அவ்விடத்தில் நின்று, களைப்பாறி தம் பயணம் முழுவதையும் பாதுகாத்துத் தந்தமைக்கு நன்றி சொல்லி செல்லும் பழக்கத்தையும் புராதனர்கள் கொண்டிருந்தனர். தெருக்களின் இடைநடுவில் கோயில் அமைக்கப்பட்டமைக்கும் காரணம் இருந்தது. சிலவேளைகளில் வீதியின் இடைநடுவில் பயணித்துக்கொண்டிருக்கும்போது இரவுப்பொழுது ஏற்பட்டுவிடும். அவ்வேளைகளில் அந்தக் கோயிலில் தங்கிநிற்பர். தீவிரை எனப்படும் காட்டு விறகுகளால் ஆன அடுப்பினை செய்து அந்த வெளிச்சத்தில் மிருகங்களின் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வர். இப்படியானதொரு வாழ்வியல் தேவையின் பின்னணியிலேயே வீதியோரத்தில் கோயில்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் இன்று அந்தக் கோயில்கள் எல்லாமே வட இந்திய – ஆகம வழிபட்ட தெய்வங்களின் ஆலயங்களாக மாறிவருகின்றன. தன் இன வரலாறு தொடர்பிலும், பண்பாடு தொடர்பிலும் சரியான புரிதலற்ற மக்கள் கூட்டமொன்றின் தவறான நடவடிக்கைகளால் இந்தப் பண்பாட்டுப் பெருங்கூடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
உதாரணத்திற்கு, ஐயனார் கோயில் அமைந்திருந்தபடியால் ஐயங்கன்குளம் எனப் பெயர் பெற்ற அக்கராயன் ஐயனார் கோயில் இன்று வன்னியில் மிகப் பிரமாண்டமான ஐயப்பன் ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் வழிபாட்டு மரபுகளுக்கும் ஐயப்பனுக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இந்நிலையில் இந்தியா சென்று வரும் பக்த கோடிகள் தமக்கு இயைபானதொரு கோயிலாக, மரபார்ந்த ஐயனார் ஆலயத்தை மாற்றியிருக்கின்றனர். இதுவொரு பண்பாட்டுச் சிதைப்பு. இந்தியாவில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு பக்தர்களைத் திரட்டுவதற்காக ஈழத்தமிழர் வழிபாட்டு மரபொன்று சிதைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டானுக்குச் செல்லும் காட்டுப் பாதையின் ஆரம்பப் பகுதியில் தொன்மைக்கால ஐயனார் கோயிலொன்றிருந்தது. இறுதிப் போர் காலத்தின்போது அந்தக் கோயில் முன்னரங்க நிலைகளில் அகப்பட்ட போதும் பெரியளவில் அழிவுகள் ஏற்படவில்லை. மீள்குடியேற்றத்தின் பின்னரும் சில வருடங்கள் அது ஐயனார் கோயிலாகவே வழிபடப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்த ஐயனார் ஆலயம்கூட ஐயப்ப சுவாமி ஆலயமாக மாற்றப்பட்டிருக்கின்றது.
மாங்குளம் சந்தியிலிருந்து மல்லாவி நோக்கி செல்லும் காட்டு வீதியின் தொடக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் அமைந்திருந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்தப் பிள்ளையார் கோயில் பிரமாண்டமான சாயிபாபா கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் வல்லைவெளி ஆரம்பிக்கின்ற இடத்தில் பழைமையானதொரு முனியப்பர் கோயில் இருந்தது. வடமராட்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் அனைவரும் அவ்விடத்தில் இறங்கி, வழிபட்டு விட்டே தம் பயணத்தை ஆரம்பிக்கும் மரபார்ந்த பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தது. ஆனால் தற்போது அவ்விடத்தில்கூட பிரமாண்டமானதொரு அனுமார் கோயிலும், சாய்பாபா ஆலயமும் கட்டப்பட்டுள்ளன.
இப்படியாக ஈழத்தில் எங்கெல்லாம் மரபார்ந்த வழிபாட்டு இடங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் இந்தியாவிலிருந்து வியாபார நோக்கில் கடைவிரித்திருக்கின்ற புதிய தெய்வ அவதாரங்களுக்கான கோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நல்லூருக்குப் போட்டியாகக் கூட, நல்லூர் கோயிலுக்கு அருகிலேயே சாயிபாபா கோயிலொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களில் அவ்வீதியால் செல்லமுடியதாளவுக்கு சாயிபாபா பக்தர்களினால் கோயில் சூழல் நிரம்பி வழியும். தொன்ம வரலாற்றையும், மரபார்ந்த சுதேசிய வழிபாட்டு முறைகளையும் கொண்டிருக்கின்ற ஈழத்தமிழர்கள், இன்று அதனையெல்லாம் பின்தொடராமல் கைவிட்டு இந்திய பண்பாட்டு ஆதிக்கத்தினுள் அள்ளுண்டு செல்வதையே மேற்படி கோயில்களின் மாற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு பண்பாட்டு மோகம்போல மாறிவரும் இந்தப் பண்பாட்டுச் சிதைப்பை முன்னின்று செய்வது யார்? இதற்கான பணம் எங்கிருந்து வருகின்றது? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.