ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தி
முதலில் இப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்த சிறுவர் நீதிக்கதை ஒன்றை சொல்லிவிட்டு மாண்புமிகு டோனி பர்க் விசயத்திற்கு வரலாம். நமக்கெல்லாம் கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகத்தின் கதை தெரியும் தானே. முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி ஒட்டகத்தில் பயணம் செய்தான் .இரவு நேரத்தில் தான் கூடாரத்தில் ஓய்வெடுத்தான் .அவனது ஒட்டகம் வெளியே படுத்து இருந்தது. இரவு அதிக குளிர். அந்தக் குளிர் தாங்காமல் ஒட்டகம் கூடாரத்துக்குள் சிறிது மூக்கை உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இறுதியில் வியாபாரி வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம். இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்ட கதை தான்.
கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் துரித கதியில் ஒரே அமர்வில் 30 சட்டங்கள் ஒரு மனதாக நிறைவேறின. அவற்றில் மிக முக்கியமானதும் , உலகளவில் ஆஸ்திரேலியாவிற்கு இருக்கும் கண்ணியமான பேருக்கு களங்கம் விளைவிப்பதுமான சட்டம் தான் குடியேற்றத் திருத்தச் சட்ட மசோதா. மேலும் இரண்டு குடியேற்றம் தொடர்பான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த குடியேற்றத் திருத்த வரைவுகளின் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு :
1. மூன்றாம் நாடுகளுக்கு அதிகமான மக்களை அனுப்ப அரசாங்கத்திற்கு பூரண அனுமதி
2. புகலிடக் கோரிக்கை விடுத்த மக்களை நாடு கடத்தும் போது பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்படுவதிலிருந்து அரசாங்கத்திற்கு விலக்கு அளித்தல்
3. நாட்டின் குடியுரிமை அல்லாதவர்களை குறிப்பிட்ட செயல்களை முடிக்க செய்யும் அல்லது அதற்கு இணங்காதவர்களை நாட்டினை விட்டும் அகற்றும் முழு அதிகாரம் குடியேற்ற அமைச்சகத்திற்கு வழங்குதல் . இந்த வழிகாட்டுதலுக்கு இணங்காதவர்களுக்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் அதிகாரம்.
4. தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்தான மசோதாவானது , குடியேற்றக் காவலில் உள்ளவர்களுக்கு மொபைல் போன்கள் அல்லது போதை பொருட்கள் போன்ற ஆபத்தான பொருட்களை குடியேற்ற அதிகாரிகள் பறிமுதல் செய்ய அனுமதித்தல்.
குடியேற்ற சட்ட திருத்த வரைவு (Migration amendment bill 2024):
கடந்த நவம்பர் 7 ஆம் திகதி ஆஸ்திரேலிய மத்திய உள்துறை அமைச்சர் டோனி பர்க் குடியேற்றத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்த வரைவானது குடியேற்ற தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு கால்விலங்கு அணிவித்தல் ,குடிமக்கள் அல்லாதவர்களை தடுப்புக்காவலில் வைத்தல் மற்றும் இம்மக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான கூடுதல் அதிகாரங்களை அரசுக்கு அளிக்கிறது.
இந்த வரைவின் முக்கியமான அம்சமானது , ஆஸ்திரேலியாவில் இருந்து குடிமக்கள் அல்லாதவர்களை மூன்றாம் நாடுகளுக்கு நாடு கடத்துவது , இவ்வாறாக நாடு கடத்தப்பட்ட மக்களை காவலில் தடுத்து வைக்க இந்த மூன்றாம் நாடுகளுக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குகிறது. இதே போன்று புகலிடம் தேடி வரும் அகதிகளை , ருவாண்டா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு நாடு கடத்தும் சட்டம் கடந்த வருடம் ஐக்கிய அரசாங்கத்தில்(UK ) நிறைவேற்றியது ஞாபகம் வருகிறதா ? .
இந்தச் சட்டத்தினால் 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் அகற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதாவது பிரிட்ஜிங் விசாவில் உள்ள 4,452 பேர், குடியேற்ற மற்றும் சமூகநல தடுப்பு காவலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 1,179 பேர் மற்றும் காலவரையற்ற குடியேற்ற தடுப்பு சட்டத்திற்கு புறம்பானது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக விடுவிக்கப்பட் 246 பேர் இந்த சட்டத்தினால் உடனடியாக ப்பாதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த வரைவின்படி , அநியாயமாக குடியேற்றத் தடுப்புக் காவலால் பாதிக்கப்பட்ட எந்த நபரும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாதபடிக்கு அரசாங்கத்திற்கு முழுவிலக்கு அளிக்கிறது.
நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது ,எந்த மூன்றாம் நாடுகளுக்கு ஏதிலிகள் நாடு கடத்தப்படுவார்கள் ,அவர்களின் பாதுகாப்பினை ஆஸ்திரேலியா அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்யும் , மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது குறித்தான எந்த வழிமுறைகளும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சட்டத்தை குறித்து அகதிகள் மனித உரிமைகள் சட்ட மையம், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் மற்றும் ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற அனைத்து அமைப்புகளும் மிகுந்த அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.இந்தக் குடிவரவு சட்டத்திருத்த கொள்கை மாற்றங்கள் நமது முன்னாள் மற்றும் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் கொள்கைகளைப் பிரதிபலிக்கின்றன என்று வல்லுநர்கள் சொல்வதில் எந்த மிகையுமில்லை.
தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான வரைவு :
குடியேற்ற தடுப்பு காவலில் உள்ள ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதவர்களிடமிருந்து போதைப்பொருள் மற்றும் அலைபேசிகளை பறிமுதல் செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கும் மசோதா கடந்த மதம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி "தடுப்புக்காவலில் உள்ள ஒருவர் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பொருள் , ஏதாவது ஒரு பொருள் அந்த மையத்தில் வசிக்கும் மற்றவருக்கும் ஏதோ ஒரு வகையில் உடல் அல்லது மனநலம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சாத்தியம் இருக்குமாயின் அந்தப் பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் . முக்கியமாக அலைபேசிகள் , போதை மற்றும் ஏதேனும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள்.
கைதிகள் அலைபேசிகளைக் கொண்டு மிகக் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கொண்ட செயலிகள் மூலம் போதைப்பொருள் மாஃபியாவை சிறையில் இருந்து நடத்துகின்றனர். இதனால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பிற்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்
இந்தச் சட்டமானது தனிமனிதனின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எனவும் , தடுப்புக்காவலில் இருக்கும் நபர் தனது வழக்குத் தொடர்பாக சட்ட ஆலோசனை பெறுவதற்கு தேவைப்படும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பறிப்பதால் கடும் மனம் அழுத்தத்துக்கு உள்ளாவார் என்று பல்வேறு சட்ட மற்றும் மனித உரிமை ஆணையங்கள் எதிர்ப்புக் குரல் தெரிவித்தன .
இந்த எதிர்ப்பினைத் தொடர்ந்து " கைதிகளின் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டால், அவர்கள் சட்ட ஆலோசனையைப் பெற மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைத் தொடர்புகொள்வதற்கு "மாற்றுத் தகவல்தொடர்பு வழிமுறைகள்" வழங்கப்படும் " என்று அமைச்சர் தெரிவித்தார் . ஆனால் இந்த மாற்றுத் தொடர்பு சாதனங்கள் எவ்வாறு செயல்படும் , அரசாங்கம் இந்த சாதனங்களை உளவு செய்யாது என்ற உறுதி போன்ற எந்த தெளிவுகளையும் இந்த சட்டவரைவில் தெரியப்படுத்தவில்லை.
ஆனால் இந்தப் பழைமைவாத ,தீங்கு விளைவிக்கும் சட்ட திட்டங்களுக்கு எதிர்த்தரப்பான லிபரல் கூட்டணி முழு ஆதரவு வழங்கியதால் ஏக மனதோடு இந்த சட்ட வரைவானது நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
நாடு கடத்தப்படும் அதிகாரம்
கடந்த 2024 மார்ச் மாதம் லேபர் அரசாங்கம் அறிமுகப்படுத்திய மசோதாவானது " குடிமக்கள் அல்லாதவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புதல் அல்லது அதற்கு இணங்காதவர்களை அதிகபட்சம் 12 மாத சிறைத்தண்டனை அளிக்க வகைசெய்யும் அதிகாரம்" உள்ளடக்கியதாகும்.
குடிமக்கள் அல்லாதவர்களை "தங்கள் உடனடி மற்றும் சட்டப்பூர்வ அகற்றலை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் ஒத்துழைக்க வைத்தல் " ,அதுமட்டுமின்றி இவ்வாறான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்காதவர்களை நாடுகடத்த தேவைப்படும் கூடுதல் அதிகாரங்களை அமைச்சகத்திற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.
அத்தோடு இவ்வாறு நாடுகடத்தப்படுவதை ஏற்காத நாடுகளின் விசாக்களை நிராகரிக்கும் அதிகாரத்தையும் இந்த வரைவு வழங்குகிறது. இந்த சட்டதிருத்தங்களைக் குறித்து பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் எதிர்ப்பு அளிக்கப்பட்டது . குறிப்பாக க்ரீன் கட்சியினர் இந்த சட்டமானது "டிரம்ப் பாணி பயணத் தடை" என்று தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். "
இந்த மசோதாவை தாமதப்படுத்தி மறு விசாரணைக்கு அனுப்புவதில் லிபரல் கூட்டணியும் ,க்ரீன் கட்சியும் முனைப்பு காட்டின . இந்த வரைவில் குழந்தைகள் மற்றும் புலம்பெயர் சமூகங்களின் நலன்களைக் கட்டாயமாகக் கருத்தில் கொள்வது உட்பட விரிவான திருத்தங்களை எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தன.
இத்தகைய அனைத்து பரிந்துரைகளும் நிறைவேறவில்லை என்றாலும் , ஏற்காத நாடுகளின் விசாக்களை நிராகரிக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துதை இன்னும் மூன்று வருடத்திற்கு தள்ளிபோடுவதில் எதிர்க்கட்சிகள் வென்றன.
கோவிட் தொற்றுக்காலத்திற்கு பிறகு ஏற்பட்ட உலகமெங்கும் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வினை தீவிர வலதுசாரிகள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் பொது எதிரியை உருவாக்குவதில் தொடர்ந்து வென்று வருகின்றன. இந்தப்பிரச்சினைகளுக்கு வந்தேறிகள் எனப்படும் புலம்பெயர்ந்தவர்கள் ,இஸ்லாமிய / யூத எதிர்ப்பு என வெவ்வேறு வெறுப்புகளை வளர்த்து ,மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர் . இதன் காரணமாகவே இவ்வாறான மனித உரிமைகளுக்கெதிரான இந்த சட்டங்களை ஆட்சியாளர்களால் எந்தவித எதிர்ப்புமின்றி நிறைவேற்ற முடிகிறது.
இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு இதை விட தகுந்த மேற்கோள் இல்லை. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பில் வரும் மிக முக்கியமான கதை " உலகம் யாவையும்" . இந்தக் கதையானது காரி டேவிஸ் எனும் உலகக் குடிமகன் எனும் கடவுசீட்டு கொண்டவரைப் பற்றியது. அந்தக் கதையில் காரி டேவிஸ் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பார்வையாளராகச் சென்று துண்டுப்பிரசுரங்களை வீசியபடி எழுப்பிய கோஷம் என்னவென்றால் ‘உலகை பங்குபோடுவதை நிறுத்துங்கள். நாடு என்பது கொள்ளைக்காரர்கள் வகுத்த எல்லை அடையாளம். மனிதர்களை சேர்ந்து வாழ அனுமதியுங்கள். ஒரே உலகம், ஒரே மக்கள்! ’ .