'இப்போ எல்லாம் யாருங்கசாதி பாக்குறாங்க'
இந்தச் சொல்லாடல் இந்தியாவில் மிகப் பிரபலம். இந்தியாவிலேயே இப்போதெல்லாம் யாரும்சாதி பார்ப்பதில்லை என்றால், வெளிநாடுகளில் அதற்கான வாய்ப்பே இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் அப்படிச் சொல்வதில்லை.
2023 பெப்ரவரியில் அமெரிக்காவில் முதன்முதலாக சியாடேல் நகரம்சாதி ப் பாகுபாட்டை தடை செய்தது.சாதிப் பாகுபாடு குறித்த பல ஆய்வுகள் இங்கிலாந்தில் மேற்கொள்ள பட்டுள்ளன. இரண்டு நாடுகளிலுமே சாதிப் பாகுபாட்டை தடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் இந்தியாவை தாண்டி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியிலும் சாதிப் பாகுபாடுகள் இருக்கின்றன என்பதைத் தான் இவை நிரூபிக்கின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்தில் சரி. ஆஸ்திரேலியாவில்?
அமெரிக்கா, இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் இந்தியர்கள் குடியேறியது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த கால கட்டத்தில் தான். அதனால் தான் அந்த இரு நாடுகளிலும் மூன்றாம் தலைமுறை புலம்பெயர் இந்தியர்களை காண்பது எளிதானதாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இரண்டாம் தலைமுறை புலம்பெயர் இந்தியர்களைக் காண்பதே அரிது. அதனால் தான் அந்த நாடுகளில் சாதிப் பாகுபாடு பெரும் அளவில் சர்ச்சையான போதும் ஆஸ்திரேலியா மௌனம் காத்தது.
ஆனாலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கூட ஏற்படாத ஒரு மாற்றம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்கிறது. அது என்ன மாற்றம்? எப்படி நிகழ்ந்தது? யாரால் நிகழ்ந்தது?
கடந்த நவம்பர் மாதம் Australian Human Rights Commission (AHRC) வெளியிட்ட 63 பரிந்துரைகளில் சாதிப் பாகுபாட்டைக் குறிப்பிட்டுள்ளது. அதில் 17வது பரிந்துரையில் 'சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக சட்ட பட்டதுக்காப்பு உண்டாக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிய பட வேண்டும், ஏற்கனவே இருக்கும் சட்டத்தை மாற்றி அமைப்பது உட்பட' என்று பரிந்துரைத்துள்ளது.
மற்ற இரண்டு நாடுகளை போல அல்லாமல், ஆஸ்திரேலியாவில் பெரும் சாதிப் பிரச்சினைகள் இல்லாத வேளையில் இப்படி ஒரு பரிந்துரை வெளியாவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நம்மில் யாருக்காவது தோன்றினால், ஒன்று நாம் உயர்சாதி என்று சொல்லப்படுகின்ற வகுப்பையோ அல்லது இடைநிலைச்சாதி என்று சொல்லப்படுகிற வகுப்பையோ சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு இனப் பாகுபாடு நடைபெறுகிறதா இல்லையா என்பதை ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் தான் சொல்ல வேண்டுமே ஒழிய, அதனால் சிறிதும் பாதிக்கப்படாத வகுப்பைச் சேர்ந்தவர்கள், அப்படி ஒரு ஒடுக்குமுறை நடக்கவே இல்லை என்று சொல்வது அறமற்றது.
அப்படி என்ன ஆஸ்திரேலியாவில் சாதி ஒடுக்குமுறை நிகழ்ந்துள்ளது?
ஒரு பெண், ஒரு வீட்டில் ஒரு அறையை மட்டும் எடுத்து வாடகைக்குத் தங்கியுள்ளார். சில மாதங்கள் கழித்து, அவர் உடன் தங்கும் நபர் , அந்த பெண் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அடுத்த முறை அந்தப் பெண் வீட்டின் வாடகையைச் செலுத்தும் பொழுது, அந்தப் பணத்தை கைகளால் வாங்காமல், ஒரு மேசையின் மீது வைக்கச் சொல்லி , அதன் மீது தண்ணீர் தெளித்து பணத்தை எடுக்கிறார்.
ஒரு குழந்தை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குழந்தை என்பதால், பிறசாதியைச் சேர்ந்த குழந்தைகளின் பிறந்தநாள் விழாவிற்கு செல்லும் பொழுது, உள்ளே பூஜைகள் முடியும் வரை அந்தக் குழந்தை வெளியிலேயே நிற்க வைக்கப்பட்டார். (The Guardian). Brisbane இல் வசிக்கும் ஒரு நேபாளி, ஒரு ஒடுக்கப்பட்டசாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் (ABC ). Cairn இல் வாழும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேந்தவர், தன் தகப்பனார் இறப்பிற்கு சடங்கு செய்ய கூட ஒரு பார்ப்பனரும் முன்வரவில்லை என்கிறார் (ABC).
மேற்சொன்னவை வெறும் ஓரிரு எடுத்துக்காட்டுகள் தான். இணையத்தில் தேடினால், இந்தியாவில் என்னென்னசாதி ஒடுக்குமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவோ, அவை எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆஸ்திரேலியாவிலும் கடைபிடிக்கப்படுகின்றன என்பதே நிதர்சனம். பல தலித்துகளுக்கு சாதி அடிப்படையில் வீடு மறுக்கப்படுகின்றது.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்பது நியூட்டன் விதி.சாதி ஒடுக்குமுறை இருக்கும் என்றால், அதற்கு எதிரான செயற்பாடுகளும் இருக்க வேண்டும் அல்லவா. அதன்படி பல இடதுசாரி இயக்கங்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தங்கள் குரலைப் பதிவு செய்து வருகின்றன. அதில் ஒன்று தான் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA). AHRCசாதி ஒடுக்குமுறையை அங்கீகரித்ததில் PATCA வின் பங்கு அளப்பரியது.
ஆஸ்திரேலியாவில் சாதி ஒடுக்குமுறை இருக்கிறது என்று ஒருசில பத்திரிகைச் செய்திகளையும் வாய்வழிச் செய்திகளையும் கடத்தியதால் இது சாத்தியமாகவில்லை. இந்தக் கட்டத்திற்கு வர, PATCA நிர்வாகிகள் மேற்கொண்ட கருத்தரங்கங்கள், அரசியல்வாதிகளுடனான கலந்துரையாடல்கள்,சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக விடுத்த அறிக்கைகள் என்று அந்தப்பட்டியல் நீளும். அதன் அடிப்படையில் FECCA வுடன் PATCA இனைத்து நடத்திய ஒரு மிக முக்கியமான ஆய்வே இந்த பரிந்துரைக்கான அடிப்படை காரணம்.
Federation of Ethnic Communities Councils of Australia என்பதே FECCA வின் விரிவாக்கம். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பல்வேறு இ்ன, மொழி, மதம் சார்ந்த மக்களை மேன்படுத்துவதற்காக இயங்கும் துறை. FECCA வின் அனுமதி பெற்று PATCA ஒரு கலந்தாய்வை மேற்கொண்டது. கலந்தாய்வை மேற்கொண்டது சிட்னி Macquire பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக பணிபுரியும் திரு. செல்வராஜ் வேலாயுதம். இவர் புலம்பெயர்வு பன்முக கலாசாரம் மற்றும் இனம் பற்றிய துறைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டவர்.
அவரின் தலைமையில் பல்வேறு கட்டங்களாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளன பலதரப்பட்ட இந்தியர்களும் கலந்து கொண்டு தங்களின் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். சிட்னியில் பிரசித்தி பெற்ற ஹெலென்ஸ்புர்க் கோவிலில், 'ஜெய் ஸ்ரீராம்' சொன்ன பிறகே உணவு வழங்கப்படும் என்று ஒருவர் பதிவு செய்துள்ளார். Special Religious Education அடிப்படையில் ஹிந்து மதம் குறித்த வகுப்புகளில் சனாதன தர்மமாகியசாதி அடுக்குமுறை குழந்தைகளுக்கு பாடமாக எடுக்கப்படுகிறது என்பதும் பதிவாகியுள்ளது. இறை வழிபாட்டில், உணவில், கல்வியில், விழாக்களில் சாதி கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் பல துறைகளிலும் உயர்சாதி என்று சொல்லக் கூடியவர்களே பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதும் இந்த ஆய்வில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்கள் எப்போது பெருமளவில் ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர் ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே சாதி ஒடுக்குமுறை தொடங்கி இருந்தாலும், 2019ல், கோவிட் காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலியா அரசாங்கம் முதன்முறையாக சாதி அடிப்படையில் ஒடுக்குமுறை இருப்பதை அறிந்தது. அதனை தொடர்ந்து PATCA ,2020 ஆண்டு தொடங்கி 30 க்கும் அதிகமான ,சாதிப்பாகுபாடு குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. PATCA வின் தொடர் முயற்சியால் AHRC ஆல் அங்கீகரிக்க பட்ட FECCA , PATCA வுடன் இணைந்து கலந்தாய்வை மேற்கொண்டு இதனைச் சாதித்துள்ளது.
இவை ஒருபுறம் இருக்க, குயின்ஸ்லாந்து அரசு, அதன் இனவாத எதிர்ப்புச் சட்டத்தில் சாதியை இணைத்துள்ளது. இது வரும் ஜூலை 2025 ல் இருந்து அமுலுக்கு வரும். இதே முன்னெடுப்பை தற்பொழுது NSW அரசிடமும் முன்னெடுத்து வருகிறது PATCA .