வெற்றிக்கொண்டாட்டத்துக்கு தயாராகும் ஜோ பைடனின் ஆதரவாளர்கள்

banner

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை நெருங்கி உள்ள ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகின்றனர்.





அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் பின்தங்கி உள்ளார். கடும் போட்டி உள்ள மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வாக்குஎண்ணிக்கையை நிறுத்தும்படி வலியுறுத்தி உள்ளார். 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.





இந்நிலையில், வெற்றியை நெருங்கி உள்ள ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். சில மாநிலங்களில் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை ஏற்படுத்தும் முயற்சியை ஜோ பைடன் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர்.





ஒவ்வொரு வாக்கையும் கண்டிப்பாக எண்ண வேண்டும் என்று வலியுறுத்தி நியூயார்க்கில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். 5ஆவது அவென்யூவில் இருந்து வாஷிங்டன் சதுக்கம் வரை அமைதியாக முறையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.





இதேபோல் மிச்சிகனில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தி டிரம்ப் ஆதரவாளர்கள் டெட்ராய்ட்டில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.





தற்போதைய நிலைவரப்படி ஜோ பைடன் வெற்றியின் விளிம்பில் உள்ளார். அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்.