தலிபான்கள் வெற்றிநடை - ஆப்கானின் கள நிலைவரம்....

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ஆப்கான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தாலிபன்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள நகர எல்லையில் காத்திருக்குமாறு தமது போராளிகளை தாலிபன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.





மக்கள் அதிகம் வாழும் காபூல் நகரில் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து நேரலாம் என்று கருதி, நகரின் எல்லைகளிலேயே தயாராக காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாலிபன்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.





அதில், தற்போதைக்கு நகரின் பொறுப்பு அரசிடமே உள்ளது. அமைதியான வழியில் ஆட்சிப்பொறுப்பை அரசு ஒப்படைப்பது தொடர்பாக அதனுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.





மேலும், ஆப்கானியர்கள் நாட்டுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு வலியுறுத்தியுள்ள தாலிபன்கள், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறுப்புள்ள அரசாங்கம் மூலம் எதிர்கால இஸ்லாமிய அரசு முறைக்கு நாடு மாறுவதை காண வேண்டும் என்று கூறியுள்ளனர்.





எனினும், காபூல் வீதிகளில் தாலிபன் போராளிகள் தங்களுடைய கொடிகளை ஏந்தியவாறு நிற்பதையும் சில இடங்களில் துப்பாக்கி சூடு சத்தமும் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அங்கு அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் தாலிபன்கள்வசம் ஒப்படைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.





எனினும், அந்த பிராந்தியத்தில் விரிவாக செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிபிசியின் யால்டா ஹக்கிம், "தாலிபன்கள் தலைநகருக்குள் முன்னேறி வரும்போது பெரிய எதிர்ப்பு காணப்படவில்லை," என்று தெரிவித்தார்.





ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமை, மனிதாபிமான பேரழிவாகி விட்டது என்று ஐ.நா சர்வதேச வளர்ச்சிக்குழுவின் முன்னாள் செயலாளர் ரோரி ஸ்டீவார்ட் கூறியுள்ளார்.





"இந்த நாட்டில் எல்லாமே தவறாக நடக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவ நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள். எங்கும் சூறையாடல்கள் நடக்கின்றன. சொந்த நாட்டை விட்டே மக்கள் அகதிகள் போல வெளியேறுகிறார்கள். நடக்கும் சம்பவங்களைப் பார்த்து பல ஆப்கானியர்களும் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர்", என்று அவர் தெரிவித்தார்.





தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் வலுவாக இருந்த வடக்குப் பகுதியின் கடைசி முக்கிய நகரமான மசர் இ ஷரீஃப்பையும் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.





பன்னெடுங்காலமாகவே மசர் இ ஷரீஃப் நகரம் தாலிபன்களுக்கு எதிராக இருந்தது. அப்படிப்பட்ட நகரத்தை தாலிபன்கள் கைப்பற்றி இருப்பது, தாலிபன்களின் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.





சில தினங்களுக்கு முன்பு தான் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நகரத்தில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





ஆப்கானிஸ்தானில் மசர் இ ஷரீஃப் உட்பட பல்வேறு முக்கிய நகரங்கள் தொடர்ந்து தாலிபன்கள் வசமாகி வருகின்றன. மேலும் தாலிபன்கள் ஆப்கன் தலைநகரான காபூலை நோக்கி முன்னேறி வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.





இந்த வன்முறையால் சுமார் 2.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு பாதுகாப்புக்காக காபூலுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.





இதுவரை தாலிபன்கள் கைப்பற்றிய நகரங்களில், பெண்கள் புர்கா அணிய கட்டாயப்படுத்தப்படுவதாகவும், சமூக விதிகளை பின்பற்றாதவர்களை அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளோ ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் இருக்கின்றனர்.