" படைகளின் பிரதானிகளாக இருந்தால்கூட மனித உரிமை சட்டம், சர்வதேச சட்டம் என்பவற்றை மீறி இருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். இராணுவத்தினர் என்பதற்காக விசேட வலுகை இருக்க முடியாது."
இவ்வாறு இலங்கையில் இறுதிகட்ட போரின்போது இராணுவ தளபதியாக பதவி வகித்த பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா திட்டவட்டமா அறிவித்தார்.
அமெரிக்காவில் தனக்கு தடைவிதிக்கப்பட்டபோது தன்னை பாதுகாக்க எவரும் முன்வரவில்லை எனவும், உள்ளக விசாரணைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவே இருந்ததாகவும் பொன்சேகா கூறினார்.
இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகள் மூவருக்கு எதிராக பிரிட்டனால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.
" இராணுவத்தினராகவே இருந்தாலும் மனித உரிமைகளை மீறினால் மன்னிப்பு வழங்ககூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஆரம்பம் முதல் நான் இருக்கின்றேன்.
மனம்பேரி படுகொலை, கிருசாந்தி குமாரசாமி படுகொலை போன்ற சம்பவங்களின்போது இராணுவத்தினரென பார்க்கவில்லை தண்டனை வழங்கப்பட்டது.
எனவே, படையினர் கொலை, மனித உரிமை மீறல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடாகும்." எனவும் பொன்சேகா எடுத்துரைத்தார்.
" பிரிட்டனால் தடைவிதிக்கப்பட்ட மூவரில் இருவர் தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் கதைத்துள்ளேன். கரன்னா கொட, ஜகத் ஜயசூரிய போன்றவர்கள் முன்கள போராளிகள் அல்லர்.
எனவே, பின்களத்தில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது பற்றி விசாரிக்கலாம்.
சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்கமாட்டேன். அவர் முன்களத்தில் இருந்த அதிகாரி, அவர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை." - எனவும் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.