ஆஸ்திரேலிய கூட்டாட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு ஆளுங்கட்சியான லேபர் கட்சி கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விலைவாசி அதிகரிப்பு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் லேபர் கட்சிக்கான வாக்கு வங்கியில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் மே மாதம் 3-ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சார போர் ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இத்தேர்தலானது ஆளும் கட்சியான லேபர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மறுபுறத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துவருகின்றது என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இத்தேர்தலில் தாம் நிச்சயம் வெல்வோம் என எதிர்க்கட்சி தலைவர் உறுதியாக நம்பிவருகின்றார்.
அதேவேளை, கடந்த 2022 கூட்டாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தனர்.
இம்முறை ஆஸ்திரேலியாவில் ஆட்சியை தீர்மானிப்பதில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கருதப்படுகின்றது.