நியூ சவூத் வேல்ஸ்ஸில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பளம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மாநில அரசுடன் முறுகல் ஏற்பட்டுள்ள நிலையிலேயே தொழிற்சங்க போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை முதல் வியாழக்கிழமைவரை தொழிற்சங்க போராட்டம் இடம்பெறவுள்ளது. இதனால் நோயாளிகளுக்குரிய அறுவை சத்திரசிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சிறப்பு நியமனங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும், அவசர சிகிச்சை பிரிவானது பொதுவிடுமுறை நாளைபோல் கட்டுப்பாட்டுகளுடன் செயல்படும். இத்தொழிற்சங்க நடவடிக்கை நோயாளிகளை ஆபத்தில் தள்ளக்கூடும் என மாநில சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு தொடர்பில் 9 மாதங்களாக பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. ஆனாலும் இன்னும் தீர்வு கிட்டவில்லை. இதனால்தான் தொழிற்சங்க நடவடிக்கையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களுக்கு நிகராக வைத்தியர்கள் சம்பள உயர்வு கோரி நிற்கின்றனர். இது சுமார் 30 சதவீத சம்பள உயர்வு கோரிக்கையாக அமைந்துள்ளது.