ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உடனடியாக போர் நிறுத்தத்துக்கு இணங்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
பிரச்சினைகளுக்கு இராஜதந்திர வழிமுறையில் தீர்வைக்காணுமாறும் அவர் எடுத்துரைத்துள்ளார். இது தொடர்பில் இஸ்ரேலின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகின.
இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்த நாட்டின்மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் திகதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடித்தது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 150 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.
எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளில் விழுந்தன. இஸ்ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் வேறு சில பகுதிகள் மீதும் ஏவுகணைகள் விழுந்தன.
இப்போரால் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அத்துடன், பங்கு சந்தையும் சரிந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.