இஸ்ரேல் - ஈரான் போர் இன்று 8-ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது.
இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இரு நாடுகள் இடையிலான போர் நேற்று 8-வது நாளாக நீடித்தது. இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஈரானில் ராணுவ உயர் அதிகாரிகள், மூத்த அணு விஞ்ஞானிகள் உட்பட 224 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலில் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் மத்திய பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து ஈரான் கடந்த 19-ம் திகதி கொத்து குண்டுகளை வீசியதாக, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்தது.
சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கொத்து குண்டுகளை இஸ்ரேல் மீது ஈரான் பயன்படுத்துவது இதுவே முதல் முறையெனக் கூறப்படுகின்றது.
ஈரான் வீசிய கொத்து குண்டுகளால், இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபா மற்றும் டான் மாவட்டங்கள் உட்பட பல பகுதிகள் மீது ஈரான் நேற்று சரமாரியாக ஏவுகணைகளை வீசியது.
இவ்வாறு போர் நீடித்து வரும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு ஈரான் மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2-வது அவசர கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.