ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்;ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் கூறியதாவது,
' அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரத்தில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு 12 மணிநேர போர் நிறுத்தம் தொடங்கும். அப்போது போர் முடிந்ததாக கருதப்படும்.
அந்த 12 மணிநேர போர் நிறுத்தத்தின் பின், ஈரான், இஸ்ரேல் தங்கள் போர் நிறுத்த்தை நீட்டிக்கும், 24வது மணி நேரத்தில், 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகமே வரவேற்கும்.
ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன்.
அதை "12 நாள் போர்ஷ" என்று அழைக்க வேண்டும். இது பல வருடங்களாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, மத்திய கிழக்கு ஒருபோதும் அழியாது!. கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக! என்று பதிவிட்டுள்ளார்.