காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, காசாவில் அந்த அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது.
இந்நிலையில் மத்திய காசாவின் சலா அல்-தின் சாலையில் உணவுப் பொருளுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிப் படைகளும் டிரோன்களும் நேற்று காலையில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நுசேரத் அகதிகள் முகாமில் அமைந்துள்ள அவ்தா மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, “உணவுப் பொருள் லொறிகளை பாலஸ்தீனர்கள் நெருங்கிச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 25 பேர் இறந்தனர். 146 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் 62 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இவர்கள் காசாவில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று தகவல் வெளியிட்டனர்.
ஆனால் சந்தேகத்துக்கிடமான வகையில் தங்களை நோக்கி வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கூறி வருகின்றன.
அதேவேளை, ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் நிறுத்தப்பட்டுள்ளதுபோல காசா போரும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டும் எனவும், மனிதநேய செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.