அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா உடன் பேச்சு நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த வாரம் ஈரான் உடன் பேச்சு நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஈரான் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்,
' அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்." - என்று அறிவித்தார்.
அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? இதனால் ஈரானுக்கு ஏதும் பலன் கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்துள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது." - எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஈரான் அணுசக்தி வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என ஆஸ்திரேலியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பிராந்திய மற்றும் உலக பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக அமையும் எனவும், எனவே, சர்வதேச உடன்பாடுகளை ஈரான் எட்ட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஈரானின் சில நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு ஆஸ்திரேலியாவில் தடை அமுலில் உள்ளது.