பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு இலக்கான நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் கேரத் வார்டு, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரை பதவி நீக்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இரு இளைஞர்களை பாலியல் துஷ் பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
44 வயதான கேரத் வார்டூவின் பிணையை இரத்து செய்யுமாறுகோரி நீதிமன்றத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்தே அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
2013 ஆம் ஆண்டில் 18 வயது இளைஞர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் என இவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு மது வழங்கிவிட்டு, பின்னர் பலவந்தமாக வல்லுறவுக்குட்படுத்தினார் என குறித்த இளைஞர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டிலும் அவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் 24 வயது இளைஞர் ஒருவரை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையிலேயே, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குற்றவாளியென, ஜுரிகள் முடிவெடுத்தனர்.
கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருக்கான தண்டனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் துறக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் வலுத்தன. அதனை அவர் ஏற்க மறுத்தார்.
இதனையடுத்து அவரை பதவி நீக்குவதற்குரிய தீர்மானத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சட்டப்போராட்டத்திலும் எம்.பி. தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தீர்மானம் இன்று நிறைவேற்றப்படவிருந்த நிலையிலேயே அதற்கு முன்னர் அவர் இராஜினாமா செய்துள்ளார்.
இதனால் அவரது தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.