வெளிநாட்டினரின் குடியேற்றத்தை தடுக்குமாறு வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் பிரதான நகரங்களில் நேற்று போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். இங்கு வசிக்கும் 2-ல் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளனர்.
இதற்கு நவ-நாஜிக்கள் மற்றும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘ஆஸ்திரேலியாவுக்கான பேரணி’ என்ற பெயரில் நடைபெற்ற இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சிட்னி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் தேசியக் கொடியேந்தியபடி பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு லேபர் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது நவ-நாஜிக்களின் வெறுப்பை பரப்பும் செயல் என்று அரசு குற்றம்சாட்டி உள்ளது. இந்த போராட்டத்துக்கு எதிராக அகதிகள் நடவடிக்கை கூட்டமைப்பு பேரணி நடத்தியது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ஆஸ்திரேலியாவுக்கான பேரணி, தீவிர வலதுசாரி அமைப்பினரின் வெறுப்பு மற்றும் கோபத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, குடியேற்ற பேரணியைத் தொடர்ந்து மெல்பேர்ணில் பூர்வக்குடி மக்களின் போராட்ட முகாம்மீது தீவிர வலதுசாரி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்தவர்கள்மீது நவநாஜிகள் குழு கொடூரமாக தாக்குதல் நடத்தும் காணொளி வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை விக்டோரியா மாநில அரசு கண்டித்துள்ளது.
பூர்வக்குடி மக்களின் கொடிகளை, கறுப்பு ஆடை அணிந்த கும்பல் மிதித்துள்ளது. தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
மெல்பேர்ணில் நடந்த பேரணி தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூர்வக்குடி போராட்டக்காரர்களை தாக்கிய விவகாரம் குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை.