இலங்கையில் ஆளும் அதிகாரத்தை பெற்றுள்ள இடதுசாரி ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க, நாட்டை சிறப்பாக ஆளக்கூடும் என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
நீண்டகாலமாக இலங்கையை வலதுசாரி தலைவர்கள் ஆண்டுள்ளதால் பல மாற்றங்களை அதிரடியாக செய்ய வேண்டிய நிலை அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஏற்படும் எனவும் புலம்பெயர் சிங்களவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் கொண்டிருந்த கட்சியொன்று ஜனாதிபதி தேர்தலில் அசுர வளர்ச்சியை வெளிப்படுத்தியது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் 42.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். 2ஆவது விருப்பு வாக்கு எண்ணல் அடிப்படையில் அநுரவின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
கல்வி புலமையுடைய பெண்ணொருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சரவையில் விஞ்ஞானப்பூர்வமாக விடயதான ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன.
சிங்கள மக்கள் மத்தியில் அநுர குமார திஸாநாயக்கவுக்கு பேராதரவு இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அவரால் முதலிடத்தை பிடிக்க முடியாமல்போனது. தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சஜித் பிரேமதாசவுக்கான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. தமிழ் பொதுவேட்பாளரும் வாக்குகளைப் பெற்றிருந்தார்.
எனினும், அநுரகுமார திஸாநாயக்க இலங்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் உள்ளது.
நல்லாட்சிகாலத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை செயற்படுத்துவதே அநுரகுமார திஸாநாயக்கவின் திட்டமாக உள்ளது. பொதுத்தேர்தலின் பின்னரே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப்பிரச்சினைக்காக அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவுள்ளது.
அதேவேளை, இலங்கையில் பொதுத்தேர்தலுக்குரிய நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என தெரியவருகின்றது.