டில்லி, கன்பராவுக்கிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் சைபர் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு உட்பட பாதுகாப்புத்துறை தொடர்பில் முக்கிய சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அரச முறை பயணமாக இந்தய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலியா வந்துள்ளார். கன்பராவிலுள்ள உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
அதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது இருவரின் முன்னிலையில் இருதரப்பினரிடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
அப்போது, இருநாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் வேகமான வளர்ச்சியை இருநாட்டு தலைவர்களும் பாராட்டினர்.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி, வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் ஆகியோரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்;,
" ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் மற்று ரிச்சர்ட் மார்ல்ஸ_டனான ஆக்கப்பூர்வமான சந்திப்பு நிறைவு பெற்றது. சைபர் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பிராந்திய சவால்கள் உள்ளிட்ட இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம்.
இந்திய பாதுகாப்புத் துறையின் வேகமான வளர்ச்சியையும், உலகளவில் இந்திய உயர்தர பாதுகாப்பு தொழில்நுட்பத் திறன் குறித்து நான் எடுத்துரைத்தேன். ஒரு சுதந்திரமான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக, நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்," - என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் வெளியிட்ட பதிவில், 'ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவு மேலும் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இது, நம்பிக்கை மற்றும் அமைதியான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.