ரஷ்யா, உக்ரைன் இடையிலான மோதல், 3-ம் உலகப் போராக மாறக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் , உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் அவர் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளார்.
உக்ரைன் போரை நிறுத்த 28 அம்ச திட்டத்தை அதிபர் ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் முன்மொழிந்தார்.
உக்ரைனின் கிரிமியா பகுதி கடந்த 2014-ம் ஆண்டில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. இதை, ரஷ்ய பகுதியாக உக்ரைன் அரசு அங்கீகரிக்க வேண்டும்.
ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்யாவிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைக்கப்படாது. ஆனால் உக்ரைனின் பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு உத்தரவாதம் வழங்கும். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 100 நாட்களில் உக்ரைனில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 28 அம்ச திட்டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
ஆனால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் 28 அம்ச திட்டத்தை ஏற்க மறுத்து வருகிறார்.
கிரிமியா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்திருக்கிறது. அந்த பகுதிகளை மீட்போம் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவருக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் கருத்து வெளியிடுகையில்,
ர ஷ்யா, உக்ரைன் போரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் ஆவர். போரை தடுத்து நிறுத்த வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று அதிதீவிரமாக முயற்சி செய்து வருகிறேன்.
ரஷ்யா, உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்தால் 3-ம் உலகப் போர் ஏற்படக்கூடும். இதை தடுக்க தீவிர முயற்சி செய்கிறேன்." என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.