லெபனான்மீது பாரிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது.
லெபனானின் பல பகுதிகளிலும் பாரியளவில் குண்டு சத்தங்கள் கேட்ட வண்ணமுள்ளன.
இந்நிலையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுவருகின்றன.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் கடந்த வருடம் ஒக்டோபர் 8ம் திகதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்தவகையில் லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை குண்டுமழை பொழிந்தது.
இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அதேபோல், லெபனானின் தெற்கு பகுதி, தலைநகர் பெரூட் உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனான் மீது தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. இதற்காக லெபனான் எல்லையில் படையினர், இராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை இஸ்ரேல் குவித்து வருகிறது.
ஏற்கனவே வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்துள்ளது. இதற்காக லெபனானின் தெற்குபகுதிகளில் உள்ள நகரங்களில் இருந்து வெளியேறும்படி பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை லெபனானில் உள்ள தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றுவதற்குரிய முயற்சியில் ஆஸ்திரேலியா ஈடுபட்டுவருகின்றது.
சர்வதேச விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால், கிடைக்கும் முதல் வாய்ப்பை பயன்படுத்தி வெளியேறுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல மாதங்களாக ஆஸ்திரேலியா இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.