சிட்னியில் எதிர்வரும் 07 ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியை ஏற்பாட்டாளர்கள் இரத்து செய்துள்ளனர்.
எனினும், எதிர்வரும் 06 ஆம் திகதி போராட்டத்தை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி எதிர்வரும் 7 ஆம் திகதியுடன் ஒரு வருடமாகின்றது.
இந்நிலையில் அன்றைய தினம் சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவந்தன. இதனை லேபர் அரசு கண்டித்திருந்தது. அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் வலியுறுத்தியது.
அத்துடன், நியூ சவூத் வேல்ஸ் மாநில பொலிஸாரும் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற முற்பட்டனர்.
இந்நிலையிலேயே ஒக்டோபர் 07 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த பேரணி கைவிடப்பட்டுள்ளது. எனினும் 6 ஆம் திகதி ஹைட் பார்க்கில் போராட்டத்தை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.