“ ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (03) முன்னிலையானார்.
அவருடன் மஹிந்த ராஜபக்சவும் வருகை தந்திருந்தார்.
வளாகத்தில் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். ஷிரந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பட்டன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போதே மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.
“சிரிலிய கணக்கு தொடர்பிலேயே விசாரணை நடக்கின்றது.
முதல் பெண்மணியாக இருந்தபோது அநாதை குழந்தைகளுக்கு அவர் கல்வி வழங்கியவர். இதனை அவர் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தவில்லை.
பாலர் பாடசாலைகளையும் ஆரம்பித்தார். இவ்வாறு கல்விக்காக அவர் செய்த சேவை வெளியில் தெரியவரவில்லை. எனினும், உண்மை என்னவென்பது நீதிமன்றம் ஊடாக தெரியவரும்.” – என்றார் மனோ கமகே.
அதேவேளை, நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இருவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.