நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Mid North Coast பகுதியில் பெண்ணொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார் என சந்தேகிக்கப்படும் நபர், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை சுமார் 6.40 மணியளவில், Tuncurry பகுதியில் உள்ள Heath Avenue வீடொன்றுக்குள் ஆயுதம் தாங்கிய நபர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு செல்லும் வழியில், அந்த நபர் ஒரு பெண்ணை கத்திக்குத்து தாக்கிவிட்டு, வெள்ளை நிற 4WD வாகனத்தில் தப்பிச் சென்றதாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த வீட்டில் 28 வயதுடைய பெண்ணை பொலிஸார் கடுமையான காயங்களுடன் கண்டதாகவும், அவருக்கு முதல் உதவிபின்னர், ஜான் ஹண்டர் வைத்தியசாலைக்கு விமானம்மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்டீவர்ட் பேரேட் பகுதியில் அந்த 4WD வாகனத்தை கண்ட அதிகாரிகள், அதை துரத்தினர். அந்த வாகனம் ஒரு விளையாட்டு மைதானத்தை கடந்து சென்ற பின்னர், போர்ஸ்டர் பாலத்தில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மற்றொரு வாகனத்தை பலவந்தமாக கைப்பற்றி (carjacking) தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்தது. பின்னர், அந்த வாகனத்தை பயன்படுத்தி ஒரு பொலிஸ் வாகனத்தை மோதி, பொலிஸ் அதிகாரிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், ரெயின்போ பிளாட் (Rainbow Flat) பகுதியில் உள்ள ஐடல்வுட் டிரைவ் வரை பொலிசார் அந்த நபரை மீண்டும் துரத்தினர். அங்கு அவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து, கத்தியுடன் ஆயுதம் தாங்கிய நிலையிலேயே மற்றொரு வாகனத்தை திருட முயன்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
சில நேரத்தில் அந்த நபர் வீட்டை விட்டு வெளியே வந்து பொலிசாரை எதிர்கொண்டதாகவும், அவரை கட்டுப்படுத்த டேசர் (Taser) பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், அவர் அருகிலுள்ள மற்றொரு காணிக்குள் ஓடியதாகவும், அங்கு பலமுறை டேசர் பயன்படுத்தப்பட்ட பின்னரும், அவர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயேபொலிசார் முதலுதவி வழங்கிய போதும், ஆம்புலன்ஸ் அதிகாரிகள் வருகைக்கு முன்பே அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் மதியம் வரை அதிகாரபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை. எனினும், அவர் 41 வயதுடையவர் என நம்பப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.