மெல்பேர்ண் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபரொருவர் பலியாகியுள்ளார்.
மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞன்மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், அவர் காயம் அடைந்துள்ளார்.
Hillside பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தபோது 61 வயது நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
வீட்டை பொலிஸார் சோதனை செய்தபோது இளைஞர் ஒருவர் கத்தியுடன் காணப்பட்டுள்ளார். அவர் பொலிஸாரை நோக்கி வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த 30 வயது இளைஞன், பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
அவர் உளரீதியாக பாதிக்கப்பட்ட நபர் என தெரியவருகின்றது. அத்துடன், உயிரிழந்த நபரின் வளர்ப்பு மகன் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த 27 வயது கர்ப்பிணி பெண்ணொருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு காயம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.