இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலிய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகர மையத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெரும் குழப்பமும் வன்முறை மோதல்களும் ஏற்பட்டன.
இந்தச் சம்பவத்தின் போது, போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் அடக்குமுறையை கையாண்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், பொலிஸாரின் நடவடிக்கைகள் அவசியமானவை என்றும், சட்டத்திற்குட்பட்டவையே என்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் கணிப்பின்படி, சிட்னி டவுன் ஹால் பகுதியில் சுமார் 6,000 பேர் திரண்டிருந்தனர். போராட்டத்தை ஏற்பாடு செய்த பாலஸ்தீன நடவடிக்கைக் குழு (Palestine Action Group – PAG), இது அமைதியான பேரணியாக நடைபெறும் என முன்பே அறிவித்திருந்தது.
ஆனால் உரைகள் நிறைவடைந்ததும், ஜார்ஜ் ஸ்ட்ரீட்டில் கூடியிருந்த போராட்டக்காரர்கள், Public Assembly Restriction Declaration (PARD) மற்றும் Major Events Act சட்ட விதிகளுக்கு மாறாக, NSW நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து, சிலர் பொலிஸ் தடுப்புகளை உடைக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், “எங்களை march செய்ய விடுங்கள்” என கோஷமிட்ட போராட்டக்காரர்கள், டவுன் ஹால் சுற்றுவட்டாரத்தில் இருந்து அவர்களை கலைக்க முயன்ற பொலிஸாருடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த உதவி காவல் ஆணையர் பீட்டர் மெக்கென்னா,
“பல கட்டங்களில் நடந்த மோதல்கள், உருளும் வகையிலான சண்டைகள் மற்றும் வன்முறைச் செயல்பாடுகளின் போது, எங்கள் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர், தள்ளப்பட்டனர் மற்றும் தாக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பொலிஸார் போராட்டக்காரர்களை தாக்கும் மற்றும் மோதும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் பரவிய நிலையில், அவை குறித்து விளக்கம் அளித்த மெக்கென்னா,
“பொலிஸார் காட்டிய கட்டுப்பாட்டில் நான் பெருமை கொள்கிறேன். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு முன் நீண்ட நேரம் பொறுமை காட்டினர்,” என்றார்.
மேலும், “சில தருணங்களில் போராட்டக்காரர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்ததால், எங்கள் அதிகாரிகளின் பாதுகாப்பே ஆபத்தான நிலைக்கு சென்றது,” என அவர் குறிப்பிட்டார்.