ஈரானிலுள்ள ஆஸ்திரேலிய தூதுவர் இற்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அழைப்பாணை விடுத்துள்ளது.
இஸ்ரேல் ஆதரவு போக்கால் ஆஸ்திரேலியா நியாயமற்ற மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும், ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் செயல் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கு விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் “இரட்டை வேட அணுகுமுறை" தொடர்பில் ஈரான் கடும் அதிருப்தியில் உள்ளது.
அத்துடன், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் பெய்ரூட் மற்றும் காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆஸ்திரேலியா மௌனம் காத்துவருவதாலேயே இந்த அழைப்iபாண விடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, இஸ்ரேல்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டித்துள்ளது.
அதுமட்டுமல்ல இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவருக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ஈரான் தூதுவர் அஞ்சலி செலுத்தியமை தொடர்பிலும் ஆஸ்திரேலியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு இராஜதந்திர ரீதியில் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இப்படியான நகர்வில் இறங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
சபா.தயாபரன்.