பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் நாட்டு மக்களிடையே இன்று (01) உரையாற்றினார்.
இந்தப் பொருளாதார நெருக்கடியானது வரும் மாதங்களிலும் தொடரும் என்பதால், பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க அரசு எடுத்துள்ள பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கியதோடு, நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் உறுதியளித்தார்.
குறிப்பாக, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறையினர் சந்திக்கும் சவால்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருமாறும் தேவையற்ற சேமிப்பைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
போர்ச் சூழலால் ஏற்படும் இக்கட்டான பாதிப்புகளிலிருந்து ஆஸ்திரேலியாவைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அவர் உரையில் சுட்டிக்காட்டினார்.