பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனுக்கு எதிரான கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாலஸ்தீனத்தில் போர் வலயத்திலிருந்து வெளியேறும் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க கூடாது என பீட்டர் டட்டன் வலியுறுத்தி இருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கே மனித உரிமை அமைப்புகள் மற்றும் அகதிகள் நலன் சார் அமைப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
ஒக்டோபர் 7 மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட பகுதியில் 2,922 பாலஸ்தீனர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது எனவும் 7, 111 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளன எனவும் உள்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேகாலப்பகுதியில் 8, 746 இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 235 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
விசா வழங்கலின்போது பாதுகாப்பு தரப்புகள் முறையான நடைமுறைகளை பின்பற்றுகின்றன என்பதை இது நிரூபிக்கின்றது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.