சிரியாவிலுள்ள முகாமில் தங்கியிருந்த ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப உள்ளனர்.
அவர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அவர்களில் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்று ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் தெரிவித்துள்னர்.
மேற்படி குழுவினர் வியாழக்கிழமை இரவு ஆஸ்திரேலியா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்படி குழுவில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் உள்ளனர்.
வடக்கு சிரியாவில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் கொண்ட பெரிய குழுவில் இவர்கள் இருந்துள்ளனர்.
இவர்கள் ஆஸ்திரேலியா திரும்புவதற்கு தாங்கள் எந்த உதவியும் வழங்கவில்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
'குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் சட்டத்தின் முழுத் தண்டனையையும் எதிர்கொள்வார்கள்' என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
'இவர்கள் ஆபத்தான பயங்கரவாத அமைப்பில் சேரும் தவறான முடிவை எடுத்தவர்கள். இந்த முடிவு மூலம் தங்கள் குழந்தைகளை ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளியுள்ளனர்,' எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தக் குழுவின் வருகையினால் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆஸ்திரேலிய உளவுத்துறை தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி குழுவில் உள்ள குழந்தைகள் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான மறுவாழ்வுத் திட்டங்களில் சேர்க்கப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.