ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு பெண்களே முக்கியக் காரணியாக விளங்குவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஆண்கள் கல்வி கற்பதில் பின்தங்குவதும், சட்டச் சிக்கல்களில் சிக்குவதும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து 1981 முதல் 2021 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை ஆய்வு செய்தனர்.
கடந்த 40 ஆண்டுகளில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட வேலைவாய்ப்பு வளர்ச்சியில் 93 விழுக்காடு பெண்களால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது.
பூர்வக்குடி பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 25.4%-லிருந்து 51.3% ஆக இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஆனால், ஆண்களின் வேலைவாய்ப்பு விகிதம் வெறும் 4.3% மட்டுமே அதிகரித்துள்ளது.
உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் தகுதிகளைப் பெறுவதில் பூர்வக்குடி பெண்கள் ஆண்களை விட அதிக முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக, இவர்கள் முதிர்ந்த வயதில் (mature-age) உயர்கல்வித் தகுதிகளைப் பெறுவது அதிகமாக உள்ளது.
ஆய்வை முன்னின்று நடத்திய கிறிஸ்டியன் ஈவா (Christian Eva) கூறுகையில்,
பூர்வக்குடி பெண்கள் மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்பு விகிதம் தற்போது சமநிலையை எட்டியுள்ளதாகவும், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்களை விடப் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
பூர்வக்குடி ஆண்கள் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பின்தங்குவதற்கு, அவர்கள் அதிகளவில் சிறைவாசம் அனுபவிப்பதே முக்கியக் காரணம் என்று ஈவா குறிப்பிட்டார்.
அத்துடன், பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, வீடற்ற நிலை, ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் மோசமான வீட்டு வசதிகள் போன்றவையும் அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதைத் தடுக்கின்றன.
2021-ஆம் ஆண்டு தரவுகளின்படி, 15 முதல் 64 வயதுக்குட்பட்ட பூர்வக்குடி மக்களில் 52.2% பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இது பழங்குடியினர் அல்லாதோரின் விகிதத்தோடு (74.6%) ஒப்பிடும்போது குறைவுதான் என்றாலும், 2016 முதல் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் பழங்குடியின வேலைவாய்ப்பு 5.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.