குவாட் Quad அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று (25) இந்தியாவில் நடைபெறுகின்றது.
இந்தோ - பசுபிக் கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை நிலைநாட்டும் நோக்கிலேயே குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்குரிய ஒரு கூட்டமைப்பாகவும் இது கருதப்படுகின்றது.
இந்நிலையில், குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இன்று இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ ஏற்கனவே இந்தியா வந்துள்ளார்.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வாங்க் இன்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதேபோல், ஜப்பான் வெளிவிவகார அமைச்சரும் டெல்லி வரவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில், இந்தோ - பசுபிக் கடல் பகுதியின் பாதுகாப்பு, சர்வதேச அரசியல் சூழ்நிலை, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இம்மாநாடு தொடர்பில் சீனா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
அதேவேளை, இந்தியா - ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான 17-வது ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திலும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.