ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சி தற்போது சந்தித்து வரும் பாரிய அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக, முன்னாள் பிரதமர் டோனி அபோட் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற இரண்டு நாள் லிபரல் கட்சியின் வருடாந்திர தேசிய மாநாட்டில், நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் மத்தியில், டோனி அபோட் கட்சியின் புதிய தலைவராக (Federal President) போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 10 நிமிடங்கள் உரையாற்றிய டோனி அபோட், தற்போது நாடு ஒருவித சீர்கேட்டில் சிக்கியுள்ளது என்றும், அதனை ஒரு லிபரல் எதிர்க்கட்சியால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த லிபரல் கட்சி, நாடாளுமன்றக் கீழ் சபையில் வெறும் 43 இடங்களாகக் குறைந்தது.
அதன் பிறகு, கட்சியின் முதல் பெண் தலைவரான சூசன் லேயை (Sussan Ley) வீழ்த்தி, ஏங்கஸ் டெய்லர் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார்.
பின்னடைவைச் சந்தித்துள்ள கட்சியை ஒருங்கிணைக்க, ஏங்கஸ் டெய்லர் பொருளாதாரம் மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் தீவிர வலதுசாரி (Right-wing) நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
குறிப்பாக, "மில்லியன் கணக்கிலான மக்கள் குடியேற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவது" என்ற டெய்லரின் திட்டத்தை டோனி அபோட் தனது உரையில் வெகுவாகப் பாராட்டினார்.
டோனி அபோட்டின் இந்த வருகையும், ஏங்கஸ் டெய்லரின் கொள்கை மாற்றமும், லிபரல் கட்சி முற்றிலும் வலதுசாரிப் பாதையை நோக்கி நகர்வதையே காட்டுகிறது.
ஏனெனில், லிபரல் கட்சியின் பாரம்பரிய வாக்காளர்கள் பலர் 'ஒன் நேஷன்' (One Nation) போன்ற தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர்.
டோனி அபோட்டின் வருகையால், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.