லெபனானில் இருந்து சைபிரஸ் வழியாக மேலும் 147 ஆஸ்திரேலியர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி லெபனானில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலியர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 552 ஆகும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் 5 முதல் நேற்றுவரை 18 அரச விமானங்களில் லெபனானில் இருந்து ஆயிரத்து 170 ஆஸ்திரேலியர்கள் வெளியேறியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
லெபனானில் உள்ளவர்களை ஏற்றி நாளைய தினமும் விமானமொன்று வரவுள்ளது. அதன்பிறகு லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்களை அழைத்துவருவதற்கு அரச செலவில் விமான சேவை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இருந்து ஆஸ்திரேலியர்கள் வெளியேற வேண்டும் எனவும், அவர்கள் வணிக விமானங்களில் தமக்குள்ள முதல் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
லெபனானில் 15 ஆயிரம்வரையான ஆஸ்திரேலியர்கள் உள்ளனர் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த எண்ணிக்கை 30 ஆயிரம்வரை இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது.