காசாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் (IDF) பணியாற்றிய ஆஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆதார ஆவணங்களை ஆஸ்திரேலிய Federal காவல்துறை (AFP) பரிசீலித்து வருகிறது.
ஆஸ்திரேலிய சர்வதேச நீதி மையத்தால் (Australian International Justice Centre) இந்த ஆதார ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய பிரஜை மூன்று குற்றங்களைச் செய்துள்ளதாகவும், அவை ஆஸ்திரேலிய சட்டத்தை மீறுவதாகவும் அந்த மையம் குற்றம் சாட்டியுள்ளது.
Australian International Justice மையத்தின் நிறுவனரும் முதன்மை வழக்கறிஞருமான ரவான் அராஃப் (Rawan Arraf) கூறுகையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு தனிநபரை மட்டுமே குறிவைப்பவை என்று தெரிவித்தார்.
"2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவரை விசாரிக்குமாறு கோரி, ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையிடம் விரிவான குற்றவியல் புகாரை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.
இந்த நபர், அவர் சார்ந்திருந்த படைப்பிரிவு (Unit), நிறுவனம் (Company) மற்றும் பிரிகேட் (Brigade) ஆகியவற்றைக் கண்காணித்தோம்.
குறிப்பாக, காசாவைச் சேர்ந்த பல பாலஸ்தீனிய குடும்பங்கள் வசித்து வந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்று தகர்க்கப்பட்டது குறித்து ஆராய்ந்தோம். துரதிர்ஷ்டவசமாக அந்தக் குடும்பங்களுக்கு இப்போது வீடுகள் இல்லை.
சொத்துக்களை அழித்தல் மற்றும் அபகரித்தல், மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளைத் தாக்குதல் ஆகிய இரண்டு போர்க்குற்றங்கள் உட்பட மூன்று குற்றவியல் குற்றச்சாட்டுகளை நாங்கள் அவர் மீது முன்வைத்துள்ளோம்," எனவும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் வெளிநாட்டு இராணுவப் படையில் பணியாற்றுவது குற்றமல்ல என்றாலும், அங்கு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகார்கள் காமன்வெல்த் (Commonwealth) அதிகாரிகளால் கையாளப்படும்.
ஆஸ்திரேலிய சர்வதேச நீதி மையத்திடம் இருந்து இந்த விபரங்கள் அடங்கிய கோப்பு கிடைத்துள்ளதை ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய Federal காவல்துறை (AFP) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" இந்த குற்றச்சாட்டுகளை தற்போது தாங்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்தக் கடமைகளின் அடிப்படையில் இந்த விஷயங்களை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.