விக்டோரியாவின் மேற்கு கிப்ஸ்லாண்ட் (Gippsland) பகுதியில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4WD வாகனத்தில் இருந்து நான்கு பேர் , ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வியாழக்கிழமை இரவு 8 மணியளவில், லிகோலா (Licola) பகுதிக்கு தெற்கே உள்ள பர்கோய்ன் ட்ராக் (Burgoyne Track) பகுதியில் அவர்கள் மெக்காலிஸ்டர் ஆற்றைக் (Macalister River) கடக்க முயன்றதாகத் தெரிகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் பழுதடைந்து, ஆற்று ஓட்டத்தில் சுமார் 25 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, 20 வயது மதிக்கத்தக்க மூன்று பெண்களும், 54 வயதுடைய ஒரு ஆணும் வாகனத்தின் கூரை மீது ஏறி நின்று, சாட்டிலைட் போன் (Satellite phone) மூலம் உதவிக்கு அழைத்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் அனைவரும் குளிரிலும் மழையிலும் நனைந்திருந்த போதிலும், காயங்கள் ஏதுமின்றி பத்திரமாக உள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் டீன் நாரமோர் (Dean Narramore) கூறுகையில், மாநிலத்தின் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டர் முதல் 250 மில்லிமீட்டர் வரை பரவலாக பலத்த மழை பெய்துள்ளது என்றார்.
"குறிப்பாக மவுண்ட் ஹோதம், மவுண்ட் பஃபலோ மற்றும் பெண்டிகோ வரை உள்ள மலைப்பகுதிகளில் கடுமையான மழை பதிவாகியுள்ளது. மலையில் பெய்த இந்த மழை நீர் அனைத்தும் தற்போது ஆறுகள், ஓடைகள் மற்றும் நதிகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது," என்று நாரமோர் தெரிவித்தார்.
இந்த பெருமழை, நீர்நிலைகளை ஆபத்தான வெள்ளக் காடாக மாற்றியுள்ளது.
மாநில அவசரக்கால சேவை (SES) கமாண்டர் கிறிஸ் ப்ரோக்வெல் (Chris Brockwell) விக்டோரியா மாகாண மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
"மக்கள் செல்லக்கூடாத இடங்களுக்குச் சென்று வாகனங்களை ஓட்டாமல் இருந்தால், இதுபோன்ற மீட்புப் பணிகளுக்கு நாங்கள் வரவேண்டிய தேவையே இருக்காது. வெள்ள நீரைக் கடப்பது உங்கள் உயிரை விட முக்கியமானது அல்ல," என்று ப்ரோக்வெல் எச்சரித்தார்.