ஈரான்மீது தொடர்ச்சியாக இரண்டாவது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், அங்குள்ள சுமார் 90 இராணுவ இலக்குகளைத் தங்களது படைகள் தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்களின் வீடியோ தொகுப்புடன் எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள பதிவில்,
"ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி சிவிலியன் மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் முடக்குவதே" இந்தத் தாக்குதலின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் கடற்கரையோரமாக அமைந்திருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense Systems), கடலோரக் கண்காணிப்பு சாதனங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு தளங்கள், கடற்படைத் திறன்கள் மற்றும் இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள் ஆகியவை இந்தத் தாக்குதலுக்குள்ளான இலக்குகளில் அடங்கும்.
"இதற்கு முந்தைய நாள் இரவில் ஈரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்த சமீபத்திய புதிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன," என்று சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.