சிட்னியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மூச்சுப் பரிசோதனையின் போது (Random Breath Test), மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டேவிட் வார்னர், குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மே மாதம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போதே, வார்னரின் வழக்கறிஞர் பாபி ஹில், வார்னர் தனது தவறை ஏற்றுக்கொண்டதாகவும், தனது செயல் பொறுப்பற்றது என்பதை அவர் உணர்ந்துள்ளதாகவும் கூறியிருந்ததால், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறன்று (Easter Sunday) நண்பரின் வீட்டில் வார்னர் மூன்று கிளாஸ் வைன் (Wine) அருந்திவிட்டு காரை ஓட்டியதாக முந்தைய விசாரணையின் போது வழக்கறிஞர் ஹில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 18 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
அப்போது வார்னருக்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்படலாம். மேலும், 2,200 ஆஸ்திரேலிய டாலர் வரை அபராதமும், அதிகபட்சமாக 9 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
2024 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வார்னர், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய அணிகளின் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார்.