டார்வின் நகரில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற "இஸ்லாமோபோபியா" (இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு) சம்பவம் தொடர்பாக 53 வயது நபர் மீது ஆஸ்திரேலியக் காமன்வெல்த் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Northern Territory காவல்துறை (NT Police) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாக்கப்பட்ட சமூக அந்தஸ்து கொண்ட நபர்களுக்கு எதிராக வன்முறை அல்லது பலத்தைப் பிரயோகிப்பதாக அச்சுறுத்தி, அச்சத்தை ஏற்படுத்தியதற்காக" அந்த நபர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 7-ஆம் திகதி, ஒரு நபர், அவருடைய கர்ப்பிணி மனைவி மற்றும் அவர்களின் சிறு குழந்தையைக் இலக்கு வைத்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரின் (Joint Counter Terrorism Team) உதவியுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் துப்பாக்கிச் சட்ட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இணைந்து செவ்வாய்க்கிழமை அந்த நபரைத் கைது செய்ததாகக் காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"இந்த வழக்குப் பதிவின் தொடர்ச்சியாக, அந்த நபரின் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த காவல்துறை, அவரது துப்பாக்கி உரிமத்தையும் இடைநிறுத்தம் செய்துள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்த நபர், அக்டோபர் 1-ஆம் திகதி டார்வின் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் இச்செயல் "ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என வடக்கு யூனியன் பிரதேசக் காவல்துறையின் தற்காலிகப் படைப்பிரிவு தளபதி ராபர்ட் கிரிபித்ஸ் கண்டித்துள்ளார்.
"ஒவ்வொரு நபரும் பயமோ, அச்சுறுத்தலோ அல்லது துன்புறுத்தலோ இன்றி தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்கும் உரிமை உண்டு" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "பிறரை அச்சுறுத்தவும், பயமுறுத்தவும், அவதூறு பரப்பவும் முயற்சிப்பவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தி, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதில் காவல்துறை உறுதியாக உள்ளது" என்றும் அவர் வலியுறுத்தினார்.