யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge) வலியுறுத்தியுள்ளார்.
"இலங்கைக்கு இது புதியதொரு கதையல்ல. நாடு முழுவதிலும் உள்ள சுமார் 20 மனிதப் புதை குழிப் பகுதிகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்று கூட இதுவரை முழுமையாக விசாரணை செய்து முடிக்கப்படவில்லை" என செனட்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ஆதரவுடனான சுயாதீன அகழ்வு மற்றும் விசாரணையை சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) 1998-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியதில் இருந்தே செம்மணி விவகாரம் பதிவில் உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணிக்கு விஜயம் செய்து, சுயாதீன தடம்சார் நிபுணர்களின் முறையான விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் இதற்கான பதில்கள் நிச்சயமாகக் கிடைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலியா, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் இடைக்கால நீதி ஆகியவற்றிற்கு ஆதரவளிக்க உறுதியளித்திருந்தது. தற்போது அந்த வாக்குறுதியை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதாவது, புதை குழிப் பகுதி முழுவதையும் பாதுகாத்தல், சான்றுகள் மற்றும் எச்சங்களின் நம்பகத்தன்மையைப் பேண சுயாதீனமான கண்காணிப்பை உறுதிப்படுத்துதல், அத்துடன் இந்த விசாரணை சுயாதீனமாகவும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்குவதாகவும் அமைவதை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தீவிரமாகச் செயல்படுவதை இது குறிக்கிறது.
ஆஸ்திரேலியத் தமிழ் சமூகத்துடன் இணைந்து நானும் கேட்டுக்கொள்வது யாதெனில், ஆஸ்திரேலிய அரசாங்கம் செம்மணி விவகாரம் குறித்து இலங்கையுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
இலங்கை அரசு எடுத்துள்ள இந்த முதல் கட்ட நடவடிக்கைகளை அங்கீகரிப்பதோடு, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இப் பிரச்சினையைத் தொடர்ச்சியாகக் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும்" என செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge) வலியுறுத்தியுள்ளார்.